Saturday, August 12, 2023

பாரதியார் ஒரு அத்வைத வேதாந்தி


    பாரதியின் வேத முகம் என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். சு. கோதண்டராமன் எழுதிய இந்த புத்தகம் வலையில் இலவசமாக கிடைத்தது. பலமுகம் கொண்ட பாரதியின் ஆன்மீக முகத்தை குறிப்பாக கடவுள், வேதம் இவைகளைப் பற்றிய பாரதியின் நிலைப்பாட்டை கூறும் வகையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளதால் என் கவனத்தை ஈர்த்தது. பாரதியின் வாழ்க்கை வரலாற்றை புரிந்து கொள்ள நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதுவரையில் எழுதப்பட்டுள்ள புத்தகங்களில் பாரதியின் ஆன்மீகப் பார்வை  அதிகம் வெளிப்பட்டது இல்லை. கோதண்டராமன் அவர்களின் வேத முகம் இந்தக் குறையை போக்கியுள்ளது. பாரதியை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள இது ஒரு சிறந்த ஆவணம்.

     பாரதியார் ஒரு அத்வைத வேதாந்தி. அவருடைய பெரும்பாலான படைப்புகள் அத்வைத வேதாந்த கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்டவை, சிலவற்றில்  அத்வைத கருத்துக்கள் நேரடியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இவைகள் அத்வைதம் பற்றிய புரிதல் உள்ளவர்களுக்குத் தெரியும். பாரதியின் சிறப்பே பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் படைப்புகளை உருவாக்குவது, ஆனாலும் கூட அத்வைதம் புரிந்து கொண்டு பாரதியை படிப்பதற்கும் அத்வைதம் புரியாமல் பாரதியை படிப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கின்றது. 

    கடவுள் கோட்பாட்டை மாறுபட்ட கோணத்தில் விளக்குவதே அத்வைதம். இதற்கு  இரண்டற்ற ஒன்று என்பது பொருள். இங்கே இருப்பவைகள் எல்லாம் கடவுள் மட்டுமே. இருப்பதெல்லாம் இறைவனே. பிரபஞ்சத்திலுள்ள அனைத்திலும் கடவுளின் தன்மை வெளிப்பட்டு இருக்கிறது. கடவுள், உலகம், உயிர்கள்  இவைகள் வேறு வேறு என்பதை அத்வைதம் மறுக்கிறது. நாம் இதை கண்டு கொள்ளாமலும் இதைப் பற்றி சிந்தித்து பார்க்காமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உள்ளதை உள்ளபடி காணும் அறிவு வந்துவிட்டால் நமது அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும். இந்த அறிவை பல்வேறு நிலைகளிலிருந்து விளக்குவதே அத்வைதம்.

   வேதம் என்பது என்ன? உதாரணத்திற்கு ஒரு செல்போன் தாயாரிக்கும் நிறுவனம் சொல்போனை விற்பனை செய்கையில் அதன் விளக்க புத்தகத்தை வைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும். அதில் செல்போனை சிறந்த முறையில் பயன்படுத்திட விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதுபோல மனிதன் தன் வாழ்க்கையை துன்பங்கள் இன்றி வழ்ந்திட கொடுக்கப்பட்ட விளக்க புத்தகமே வேதம். இதில்

  1. மனிதன் என்பவன் யார்?
  2. எதற்காக மனித பிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது
  3. மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன?
  4. அந்த நோக்கத்தை அடைய வழிகள் என்ன?

 என்பவை பற்றிய விளக்கங்கள் உள்ளன.

   வேதத்தில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. முதல் பகுதி கர்ம காண்டம் இது பல்வேறு விதமான யக்ஞங்கள் செய்யும் விளக்கங்களை கூறுகிறது. இரண்டாம் பகுதி ஞான காண்டம் இதில் ஈச்வரன் (கடவுள்), ஜீவன் (மனிதன்), உலகம் பற்றியும் ஜீவ ஈச்வர ஐக்கியம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. வேதத்தின் இறுதி பகுதியில் ஞான காண்டம் இடம் பெற்றிருப்பதால் இவற்றை வேதத்தின் அந்தம் அதாவது வேதாந்தம் என்று அழைக்கின்றனர். இதற்கு மற்றொரு பெயர்  உபநிஷத். வேதாந்ததிற்கு அத்வைத விளக்கம் கொடுப்பது அத்வைத வேதாந்தம் எனப்படும். 

      மனிதனின் அறியாமை நீங்கி அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட ஞான காண்டத்தில் கூறப்பட்ட கருத்துக்களை குருவின் உதவிகொண்டு தெரிந்து, தெளிந்து அதன் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். ஞான காண்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள மனப்பக்குவம் தேவை. கர்ம காண்டத்தில் சொல்லப்பட்ட விசயங்களைச் செய்து பக்குவமடைந்து சித்த சுத்தி ஏற்பட்ட சாத்வீக குணம் நிறைந்தவர்கள் ஞான காண்டத்தை படிக்க தகுதியுடைய அதிகாரிகளாகிறார்கள்.  

  அத்வைத வேதாந்தத்தை சம்பிரதாய முறைப்படி விளக்கியவர்களில் ஆதிசங்கராச்சாரியார் மிகவும் முக்கியமானவர் அவர் ஏற்படுத்தி தந்த மரபுபடி பாரத தேசத்தில் அத்வைத வேதாந்தம் குரு பரம்பரையாக கற்பிக்கப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர், சுவாமி சின்மயானந்தா, சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் அத்வைதத்தை பாரம்பரிய மரபு மாறாமல் எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  பாரதியார் தன் வாழ்நாளில் ஏழு வருடங்கள் காசியில் தங்கியிருந்தார். அப்பொழுது முறையாக வேதம் பயின்றுள்ளார் குறிப்பாக ஆதிசங்கராச்சாரியாரின் வழி குருபரம்பரையாக வரும் அத்வைத வேதாந்தத்தை குருவின் மூலம் முழுமையாக பயின்று வாழ்க்கையிலும் அதன்படி நடந்தவர் என்பதை அவருடைய படைப்புளை படிக்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது.

 வேதத்தின் அறிவு நம்முள் நிலைப் பெற்றிட மூன்று விசயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    1) சிரவணம் 
    2) மனனம்
    3) நிதித்யாசனம்

    சிரவணம் என்பது குருவழியாக இந்த அறிவை முழுமையாக கற்றுக் கொள்வது. மனனம் என்பது பெற்ற அறிவை அலசி ஆராய்ந்து அதில் ஏற்படும் சந்தேகங்களை குருவிடம் கேட்டு ஐயங்களை நீக்கிக் கொள்வது. நிதித்யாசனம் என்பது பெற்ற அறிவில் சதாசர்வகாலமும் நிலைபெற்று இருப்பது. இதையே திருக்குறளில் 391 குறள் இவ்வாறு கூறுகிறது.

     கற்க கசடற கற்பவை கற்றபின்
     நிற்க அதற்குத் தக
 

     மனித மனதின் இயல்பு சதா சர்வகாலமும் எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டிருப்பது. எண்ணங்களை நெறிபடுத்தி இறை சிந்தனையில் மட்டும் நிலைத்திருக்க நிதித்யாசன தியானம் மிகவும் அவசியம். பெரும்பாலான பாரதியார் கவிதைகள் நிதித்யாசன தியானத்திற்கு பயன்படும்வகையில் படைக்கப்பட்டிருப்பது அத்வைதம் தெரிந்தவர்களுக்கு சுலபமாக புரிந்துவிடும்.

    பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் மற்றும் பகவத் கீதையை பிரஸ்தானத்திரயம் என்று அழைக்கின்றனர். அத்வைத கருத்துக்களை பாமரரும் புரிந்து கொள்ள பாரதியும் பிரஸ்தானத்திரிய நூல்களான பகவத் கீதை மற்றும் சில உபநிஷத்துக்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் அஷ்டாங்க யோகத்தை விளக்கும் பதஞ்சலி யோக சூத்திரத்தையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

   புதிய சொற்களையும், எளிய வார்த்தை அமைப்புகளையும் கொண்டு ஓசை நயமிக்க பல கவிதகளை படைத்துள்ள பாரதியை வெறும் கவிஞன், பத்திரிக்கையாளன், சுதந்திர போராட்ட வீரன், எழுத்தாளன், ஆசிரியன், தனி மனிதன் என்ற குறுகிய வட்டத்திற்குள் வைத்து பார்ப்பது நமது அறியாமையாலும் சில்லரைத் தனமான அரசியலாலும் ஏற்பட்டவை என்பதை இந்த புத்தகத்தை படித்தவுடன் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் பாரதி அதற்கும் அப்பாற்பட்டவன் என்பது தான் உண்மை.


அன்புடன்
தா.அருள்.

Tuesday, June 6, 2023

அறிவியல் படும்பாடு


இந்த பதிவு 2016-ல் எழுதியது. தமிழில் அறிவியல் கட்டுரையை படித்துவிட்டு மனதில் ஏற்பட்ட சலனத்துடன் இதை பதிவு செய்தேன்.


இந்த விசயத்தை நான் பேசக்கூடாது எனென்றால் நிறைய பேருக்கு கோபம் வரும். இருந்தாலும் மனது கேட்கவில்லை.

 

முன் எச்சரிக்கை: இப்பதிவில் இடம்பெறும் கருத்துக்கள் யாவும் தனிப்பட்ட யாரையும் நிந்தனை செய்வதற்காக எழுதப்படவில்லை என்ற பொருள் விளக்கத்தை முன்னதாகவே சொல்லிக்கொள்கிறேன்.

 

சென்றவாரம் கோயமுத்தூர் மாவட்ட மைய நூலகத்தில் படித்துக் கொண்டிருக்கையில் வேளாண்மை சம்பந்தமான மாத இதழ்களை படிக்க நேர்ந்தது. விவசாய கல்லுரியில இருக்கரோம் என்னதான் எழுதியிருக்காங்கன்னு புரட்டி பார்த்தேன். வேளாண் தகவல்கள் அதிகம் பரிமாரப்பட்டு இருந்தது உண்மையில் மகிழ்ச்சி. ஆனால் விசயம் அதுவல்ல. வேளாண் துறைசார்ந்த கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் முனைவர்களின் கட்டுரைகளும் கண்ணில் பட்டன. ஆசை ஆசையாக கட்டுரையை படித்தால் ஒன்றுமே புரியவில்லை. என்னடா இது தமிழ்லதான் எழுதி இருக்காங்க ஒருவேலை நாம முட்டாளா இருக்கறதனால புரியவில்லையா? என்று மனதிற்குள் ஒர் எண்ணம். இருந்தாலும் அந்த அளவிற்கு நாம அடிமுட்டாள் கிடையாதே ரொம்பவும் அறிவு இல்லைன்னாலும் சின்ன சின்ன அறிவியல் விசயங்களை புரிந்து கொள்ளக்கூடிய சிற்றறிவு நமக்கிருக்கிறதென்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு என் நண்பர்களிடம் விசாரித்தேன். ஒரே ஆச்சரியம்! ஒரு நண்பன் சொன்னான் டேய் அதப்போயி உன்ன எவன்டா படிக்க சொன்னான் அக்கட்டுரைகளலெல்லாம் அடுத்தவர்க்கள் படித்து விசயம் தெரிந்து கொள்வதற்கா எழுதப்படுகிறது அது எழுதப்படும் நோக்கமே வேறடா. தலைப்பிற்கு கீழ் பெயர் இருக்கிறதாவென்றுதான் அக்கட்டுரைகளில் நீ பார்க்க வேண்டும் என்று.  எனக்கு புரிந்து விட்டது இது கணக்கு காட்ட எழுதப்படும் கட்டுரைகளா.. சரி தான்.

 

ஒரு காலத்தில் நான் சொட்டுநீர் பாசன கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த போதும்,  இளநிலை ஆராய்ச்சியாளாராக வேலை பார்த்த பொழுதும், ஏன்.. தற்காலங்களிலும் விவசாயிகளையும், சிறு தொழில் முனைவோரையும் அதிகம் சந்தித்து வருகிறேன் என்னுடய சிறிய அனுபவத்தில் நான் உணர்ந்த விசயம் என்னவென்றால் நிறைய விவசாயிகள் நவீன தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர். விவசாய கண்காட்சிக்கு வரும் விவசாயிகள், தொழில் முனைவோர்கள் சந்தையில் கிடைக்கும் புதிய தொழில்நுட்பங்கள், புதிய விதை ரகங்கள், நோய்தடுப்புமுறைகளை தங்களுக்கு பயன்படுத்தி கொள்வதில் ஏதேனும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என்பதை தெரிந்து கொள்ள அதிக விருப்பமுடையவர்களாகவே இருக்கின்றனர். இப்படி இருக்கும் ஒரு சூழலில் கட்டுரைகள் எழுதுபவர்களுக்கு மிகப்பெரிய சமூதாய அக்கரை இருக்கவேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

 பெரும்பாலான விவசாயிகள் இன்னும் ஏழ்மை நிலையில் தான் இருந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் காசு கொடுத்து மாதாந்திரி புத்தகங்கள் வாங்கி படிப்பதே அபூர்வம் அப்படி இருக்கையில். காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் ஒன்றிரண்டு ஏழை வாசகர்களை மனதில் வைத்து கட்டுரைகளை நம்பகமான தகவல்களைக் கொண்டு செறிவோடு மெத்த படித்தவர்கள் என்று சமூதாயத்தால் மதிக்கப்படுவோர்கள் எழுத வேண்டும். அதுவே பொதுஜன கட்டுரைகளுக்கு அழகு. அதைவிட்டுவிட்டு பதவி உயர்வுக்காக கணக்கு காட்டவேண்டுமென்றும், இதனால் பணம் கிடைக்கும் என்ற நோக்கத்திலும் செயல்பட்டால் அது ஏழை விவசாயிகளையும், பணம் கொடுத்து வாங்கி படிப்பவர்களையும் ஏமாற்றும் செயல்களாகத்தான் கருதப்படுமே ஒழிய உண்மையான தகவல் பரிமாற்றமாக அது இருக்காது.


Monday, May 29, 2023

வாசிப்பு, எழுத்து, கவிதை, கவிஞன்

 


    கடந்த இரண்டு வாரங்களாக பொன்னியின் செல்வன் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். யூடியூபில் இப்படத்தில் பணியாற்றியவர்கள் குறிப்பாக மணிரத்னம், ஏ ஆர் ரஹ்மான், ஜெயமோகன் இளங்கோ கிருஷ்ணன் இவர்களின் பேட்டிகளையும், சில விமர்சன வீடியோக்களையும், பேராசிரியர். கு. ஞானசம்பந்தன் அய்யா அவர்களின் ஒரு வீடியோவையும் பார்த்தேன். இதற்கு காரணம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியானவுடன் பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அதனால் ஏற்பட்ட ஆர்வம்.  

  படத்தை பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும்  குறிப்பாக இரண்டு விசயங்களை கூறலாம்.

  1. கதை நாவலில் எழுதப்பட்ட மாதிரி எடுக்கவில்லை
  2. ஆதித்ய கரிகாலனை கொண்றது யார்? நந்தினியா?

    நான் நாவலை முழுதும் படித்ததில்லை முதல் பாகத்தில் 50 பக்கங்களுக்கும் குறைவாக தான் படித்த்தாக ஞாபகம். சோழர்கள் வரலாறு சுத்தமாக எனக்கு தெரியாது. என்னுடைய அறிவு தஞ்சாவூரை சோழர்கள் ஒரு காலத்தில் ஆண்டிருக்கார்கள், பெரிய கோயிலையும், கல்லனையும் அவர்கள் கட்டியவைகள் என்பன மட்டும் தான்.

     பொன்னியின் செல்வன் நாவலாகட்டும், படமாகட்டும் இரண்டுமே புனைவு கதைகள். இதில் அச்சுபிசகாத உண்மையை எதிர்பார்பதே அறியாமை. வணிக நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தை வரலாற்றை தவிர்த்து கலை நோக்கத்துடன் பார்க்க வேண்டும் என்பதே படக்குழுவினரின் வாதம். ஏனெனில் உண்மை வரலாறு சுயசரிதை புத்தகமாகவோ, கல்வெட்டுகளாகவோ முழுவதும் பதியப்படவில்லை. அப்படியே இருந்தாலும் அவைகள் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்திருக்கும் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்தவை திட்டமாக அறிவுறுத்தி கூறிட யாராலும் முடியாது. ஆதாரத்தின் அடிப்படையில் யூகமாக இப்படி இருந்திருக்கலாம் என  கூறும் தகவல்கள் தான் நம்மிடம் இருக்கின்றன. இவை ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு படத்தில் நான் ரசிக்கும் இரண்டு விசயங்கள் வசனம் மற்றும் பாடல்கள். இசை நன்றாக இருந்தால் அந்த பாடல் வரிகளை யார் எழுதியது என்று தெரிந்து கொள்ள ஆவல் கொள்வேன். அதுபோலவே வசனத்திற்கும். சினிமாவில் வசனத்தை ரசிக்க ஆரம்பித்தது எழுத்தாளர் சுஜாதாவினுடைய படைப்புகளை படிக்க ஆரம்பித்த பிறகு தான். இயக்குநர் ஷங்கர் படங்களுக்காக அவர் எழுதிய வசனங்கள் குறிப்பாக இந்தியன், முதல்வன், அந்நியன், எந்திரன் ஆகியவை நான் விரும்பி ரசித்தவை. சுஜாதாவினுடைய சொற்சிக்கனம், ஒசை நயம் இரண்டும் என்னை கவர்பவை. அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயமோகன் எழுதியவ வசனங்களும் ரசிக்கும் படியாக இருநத்து.

 என்னை பொறுத்தவரையில் சிறந்த படைப்பாளிகள் வாசிப்பின் மூலமே உருவாகிறார்கள். கவிதை கதை இரண்டிற்கும் வாசிப்பு மற்றும் கூர்ந்து கவனித்தல் மிகவும் முக்கியமான அடிப்படை தகுதிகள். பொன்னியின் செல்வனில் பாடல் எழுதிய இளங்கோ கிருஷ்ணன் என்னுடைய கவனத்தை ஈர்த்தார். பல்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட தமிழை கொண்டு பாடல் வரிகளை இப்படத்திற்காக எழுதியுள்ளார். தனது பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார் படத்திற்கு எழுதவற்கு முன் பல கவிதைகளையும் கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளேன் ஆனால் அவைகள் இந்த அளவிற்கு கவனம் பெறவில்லை. பொன்னியின் செல்வனால் சமுதாயத்தில் சினிமா துறையின் வீச்சையும் தாக்கத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து எழுத ஒரு உத்வேகத்தை இது கொடுக்கிறது என்றார். இந்த படத்திற்கு பாட்டெழுத ஜெயமோகன் தன்னை பரிந்துரை செய்த்தாகவும் கூறினார். மிகவும் மகிழ்ச்சி திறமை இருக்குறவன் என்னைக்காவது ஒரு நாளைக்கு வெற்றி பெறுவான் என்பதற்கு இதுவே சாட்சி.

 

 

அன்புடன்

தா. அருள்.




ஜாதகம், ஜோதிடம் நம்பலாமா? வேண்டாமா?

 


   நான் வணங்கும் குரு பேராசிரியர் க.மணி அவர்கள். சத்சங்கத்தில் ஒரு நாள் ஜோதிடம் உண்மை எனக் கூறினார். சத்குரு சாதரணமாக எதையும் கூறுவதில்லை அப்படி அழுத்தம் திருத்தமாக கூறினால் அதற்கு அர்த்தம் இருக்கிறது என்று பொருள். எதையும் நன்கு தெரிந்து கொண்டு ஆராய்ந்த பிறாகே சரி என ஏற்றுக்கொள்ளக் கூடியவர். இதை ஏன் சொல்கிறேன் என்றால் மணி சார் எனக்கு பரிட்சயம் ஆவதற்கு முன்பு வேதம், கடவுள், ஜோதிடம் இவைகள் மீது நம்பிக்கை இல்லாதவனாய் இருந்தேன். ஆனால் சார் சத்சங்கத்தில் புரியும் படி விளக்கியதால் எனக்குள் இருந்த அறியாமை விளகியது.

   ஒரு காலத்தில் ஜோதிடம் பொய் என்ற கண்ணோட்டத்தில் அதை முழுவதும் படிக்காமலும், தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லாமலும் எதிர்த்து வந்தேன். குரு உண்மை எனக் கூறியவுடன் ஜோதிடத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. யூடியூபில் வீடியோக்களையும், இன்டர்நெட்டில் Blog கட்டுரைகளையும், ஜோதிட சம்பந்தமான புத்தகங்களையும் பார்க்கவும் படிக்கவும் ஆரம்பித்தேன். தற்சமயம் ஜோதிடத்தின்  தாத்பரியத்தை ஒரளவிற்கு என்னால் புரிந்து கொள்ள முடிகிறது,

   நான் அறிவியல் மாணவன் எதையும் ஆராய்ச்சி மனப்பாண்மையுடன் பார்க்கும் பழக்கம் கொண்டவன். இயற்கையில் எல்லாம் விதிப்படி இயங்கிக் கொண்டிருக்கின்றன. அமானுஷ்யமாகவோ, தர்கரீதியாக விளக்க முடியாத விசயங்களையோ நான் உண்மை என ஏற்றுக் கொள்வதில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஜோதிடம் வானில் உள்ள கிரகங்கள் நம் வாழ்வை தீர்மானிக்கின்றன என்று கூறுகின்றது. எங்கோ பல லட்சம் கோடி கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள கிரகங்களின் நகர்வு எப்படி மனித வாழ்வை பாதிக்கும்? இது தான் பெரும்பாலனவர்களின் அடிப்படைக் கேள்வி. இதை சில உதாரணங்களை கொண்டு புரிந்து கொள்ள முயவோம்.

     அறிவியலில் Interpretation என்று சொல்லுவார்கள் ஒன்றை இன்னொன்றுடன் பொருத்தி பார்த்து விளக்க முயல்வது அதாவது Thermometer வெப்பநிலையை துல்லியமாக கூறுகின்றது. செயற்கையாக உருவாக்கப்பட்ட கருவியினால் எப்படி இவ்வளவு துல்லியமாக சொல்ல முடியும். இதற்கெல்லாம் ஒரு முறையை உருவாக்கி இருக்கிறோம். இதனை Standards என்று கூறுவார்கள். தூய நீர் கொதிக்கும் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் என்பது ஒரு Standard Value. இயற்கையில் பலவிதமான உலோகங்கள் (Metals) இருக்கின்றன. உதாரணத்திற்கு இரும்பு, அலுமினியம், பாதரசம், பித்தளை என வித விதமான உலோகங்களை சூரிய வெளிச்சத்தில் இரண்டு மணி நேரம் வைப்பதாக கொள்வோம். இரண்டு மணி நேரம் கழித்து எல்லா உலோகத்தையும் தொட்டு பாருங்கள். ஒவ்வொன்றும் வேறு வேறு வெப்பநிலையை ஏற்றிருக்கும். இதை தன் வெப்ப ஏற்புத்திறன் (Specific Heat) என்று சொல்கிறார்கள்.

    இயற்கை இவ்வாறு இருக்கையில் வெப்பநிலையை துல்லியமாக அளவிட உலோகங்களின் வெப்ப ஏற்புதிறனை Standard Value-வுடன் Interpretation செய்து வெப்பநிலையை கணக்கிடுகிறார்கள். Mercury Thermometer-ல் வெப்பநிலை உயர உயர பாதரசம் மேலே எழுகிறது. பாதரசம் மேலே எழுவதை Standard Value-வுடன் Interpretation செய்து இவ்வளவு வெப்பநிலை என கணக்கிடுகிறோம். இதுமாதிரி அழுத்தம், வேகம், ஒலி மற்றும் ஒளி போன்றவைகளையும் துல்லியமாக கணக்கிட முடியும். ஒன்றை மற்றொன்றுடன் Interpretation செய்து பார்க்க நிறைய பரிசோதனைகள் (Experiments) தேவை. பயன்படுத்தப்படும் பொருட்களின் தன்மை (Material Properties) பற்றி நன்கு தெரிந்தால் மட்டுமே துல்லியமான கணக்கீடு என்பது சாத்தியம்.

ஜோதிடமும் இது மாதிரி Interpretation செய்து பார்க்கும் முறைதான். நமது முன்னோர்கள் வானியலை நன்கு ஆராய்ந்துள்ளனர். வானியல் மாற்றங்களை மனித வாழ்க்கையோடு Interpretation செய்து பார்பதே ஜோதிடம். இதிலும் துல்லியம் என்பது சாத்தியம் தான். ஒரு ஜோதிடர் துல்லியமாக பலன் சொல்வதற்கு மிகுந்த சாஸ்திர ஞானம் கொண்டிருக்க வேண்டும். மூல நூல்களை குருவின் உதவியுடன் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கும் திறனும் ஆராய்ச்சி மனப்பான்மையும் கொண்டிருக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து.

கிரகங்களும் இயற்கை விதிப்படிதான் இயங்குகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஜோதிட விசயங்கள் மூல நூல்களில் துல்லியமாக சொல்லப்பட்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில் நீண்ட நெடிய ஆராய்ச்சிகளுக்கு பிறகே இந்த சாஸ்திரம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஆழ்ந்து படிக்கையில் தெரிந்து கொள்ள முடிகிறது.

சரி இது ஒரு புறம் இருக்கட்டும். மனித வாழ்க்கைப் பற்றி சில கருதுகோள்கள் நிலவுகின்றது அது என்னவென்று பார்ப்போம். வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் இவை.

  1. மனித பிறவி என்பது நாம் செய்த பாவ புண்ணியங்களை கழிப்பதற்காக நமக்கு கொடுக்கப்படுகிறது. 
  2. பிறக்கும் முன்பே நமது இந்த ஜென்மத்தினுடைய விதி தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றது. அதன்பின் தான் பிறப்பு நடக்கிறது. 
  3. மறுபிறப்பு உண்டு. நாம் எடுத்திருக்கும் இந்த பிறவியே பல கோடி பிறவிகளில் ஒன்று. 
  4. நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் சித்தத்தில் சேமிக்கப்படுகிறது. முற்பிறவிகளில் நடந்தவைகளும் நம் சித்தத்தில் இருக்கின்றன.

   ஜோதிடத்தை ஏற்றுக்கொள்ளும் முன் நான் மேலே சொன்ன நான்கு விசயங்களை நீங்கள் முழுமையாக நம்ப வேண்டும் ஏனெனில் ஜோதிடம் இந்த அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

   மறுபிறவி பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் நிறைய நடந்துள்ளன. ஆராய்ச்சி முடிவுகள் மறுபிறவி உண்மை  என கூறுகின்றது. நடைமுறை வாழ்க்கையிலும் மறுபிறவி என்பது உண்மை என நம்புவதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. நம் வாழ்க்கையில் சில விசயங்களை அனுமானத்தின் மூலம் யூகித்து உண்மை என புரிந்து கொள்கிறோம். உதாரணத்திற்கு மதிய வேலையில் வயிற்றில் எரிச்சலுடன் கூடிய சப்தம் வந்தால் வயிறு பசிக்கிறது என்று புரிந்து கொள்கிறோம். தூரத்தில் எங்கோ புகை வருவதை பார்த்து அங்கே ஏதோ எரிந்து கொண்டிருக்கிறதென்று பக்கத்தில் இருந்து பார்க்காமலேயே நமக்கு புரிந்துவிடுகிறது. நெருப்பில்லாமல் புகையாது என்பதுபோல அனுமானத்தின் வாயிலாக மறுபிறவி விசயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.

    புள்ளியல் துறையில் கூறப்படும் நிகழ்தகவு கோட்பாடு போன்றதுதான் ஜோதிடமும். சராசரி 60 ஆண்டுகள் கொண்ட மனித வாழ்க்கையை பிறந்தது முதல் இறக்கும் வரையில் நடக்கும் அனைத்து சம்பவங்கள், பார்க்கும் மனிதர்கள் அனைத்தையும் நாள் வாரியாக, மணித்துளி வாரியாக கணித்து கூறுவது என்பது யாராலும் முடியாத ஒன்று. இன்றைய கால கட்டத்தில் அறிவியல் முன்னேற்றம் வானிலை முன்னறிவிப்புகளை நாள் வாரியாக, மணித்துளி வாரியாக மிகத் துல்லியமாக கூறுகின்றன. இது மாதிரி மனித வாழ்க்கை சம்பவங்களை மிகத் துல்லியமாக கணித்துக் கூற எந்தவிதமான கணித மாதிரிகளும் (Mathematical Model) இன்றுவரை உருவாக்கப்படவில்லை.

    எல்லோருக்கும் அவர்கள் வாழ்வில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆசையும் ஆர்வமும் இருக்கின்றது. பெரும்பாலனவர்களுக்கு பணம், புகழ், அதிகாரம், அந்தஸ்து என அனைத்தும் தமக்கு வேண்டும் என நினைக்கின்றனர். வாழ்க்கையில் துன்பமே வரக்கூடாதென்றும் நோய் நொடி ஏதுமின்றி இறப்பின்றி வாழவேண்டும் என்பதே இந்த பூமியில் வாழும் அனைவரின் எதிர்பார்ப்பும். ஆனால் இயற்கை மனித வாழ்க்கையை வேறுவிதமாக வடிவமைத்திருக்கிறது. முரண்பாடுகள் மனிதர்களுக்கு  தெரிந்தாலும் நிதர்சணத்தை ஏற்றுக்கொள்ள ஒரு தயக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த தயக்கத்திற்கு சமுதாயத்தில் மவுசு அதிகம்.

   இன்றைய போலி ஜோதிடர்கள் இதை நன்கு பயன்படுத்தி பணம் பார்க்கின்றனர். ஜோதிடம் என்பது ஒரு சிறந்த தொழில் என்பது அவர்களுடைய கண்ணோட்டம். தொழில் என்று வந்துவிட்டாலே லாபம் தான் முக்கியம். நல்ல ஜோதிடர் என்று நாலு பேர் சொல்லிவிட்டால், ஊடகங்கள் மதிப்பளித்து புரமோட் செய்ய  ஆரம்பித்து விட்டால் இவர்கள் பாடு கொண்டாட்டம் தான். எனக்கு தெரிந்து ஜாதகம் பார்க்க 500 முதல் 5000 வரை பணம் கேட்கின்றனர். 500 மற்றும் 1500 பொதுவாக கேட்கப்படும் தொகையாக உள்ளது.

    ஜோதிடர்கள் முதலில் தாங்கள் கேட்கும் பணத்தை செலுத்திவிட்டு பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் மற்றும் நம்முடைய கேள்வி என்ன என்பதை ஜோதிடம் பார்க்கும் முன் அவர்களிடம் கூறிவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் நம்மை அனுக அனுமதிக்கின்றனர். பலன் கூறும் போது வாழ்க்கையில் ஏற்கனவே நடந்த ஓரிரு விசயங்கள் அவர்கள் செல்வதுடன் ஒத்துபோவது போல் தோன்றும். என் நண்பர் ஒருவர் கூறினார் நடந்தவற்றை கூறுபவர் ஒரு நல்ல ஜோதிடர் கிடையாது எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை துல்லியமாக கணித்த்ய் கூறுபவரே நல்ல ஜோதிடர். ஏனெனில் ஏற்கனவே நடந்தவைகளை நாம் கொடுக்கும் முன் விவரங்களைக் கொண்டு கணிக்க முடியும். உதாரணத்திற்கு எனக்கு முப்பது வயது ஆகிறது எப்போது என் திருமணம்? என்ற கேள்வியை கேட்டிருக்கிறோம் என்றால் ஏன் இவ்வளவு நாள் திருமணம் ஆகவில்லை என்ற விவரங்களை கூறுவது யாவர்கும் எளிதே. இதில் ஒரு சில விதிவிலக்குகள் இருக்கின்றன மறுப்பதற்கில்லை.

   வாழ்க்கையை பற்றின சில புரிதல்களை சிந்தித்து தெளிவாக்கிக் கொண்டால் எதிர்காலத்தை பற்றிய எதிர்பார்ப்பில்லாமல் வாழ முடியும். இந்துக்கள் ஜோதிடத்தை ஐந்தாவது வேதம் என ஏற்றுக்கொள்கின்றனர். ஆகையால் ஜோதிடம் பொய் என முற்றிலும் மறுப்பதற்கில்லை.

வாழ்க்கை பற்றியும் ஜோதிடம் பற்றியும் எனது சில புரிதல்கள் இவை:

  1. நமது வாழ்க்கையில் நடக்கும், நடக்கபோகும் சம்பவங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டன. யாராலும் அதை மாற்ற முடியாது.
  2. இன்பமும் துன்பமும் கலந்ததுதான் மனித வாழ்க்கை.
  3. ஜோதிடர்கள் கூறும் பரிகாரங்களால் விதியை மாற்ற முடியாது.

   இந்த கட்டுரையை படிப்பவர்களுக்கு கீழ்கண்ட கேள்விகள் மனதில் தோன்றலாம்

  1. ஒரு மனிதன் தன்னுடைய ஜாதகத்தை தெரிந்து கொள்வது அவசியமா?
  2. நல்ல ஜோதிடர்களை எப்படி கண்டுகொள்வது?

   இதற்கான என்னுடைய பதில் மேற்கூறிய என்னுடைய மூன்று புரிதல்களை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்களென்றால் ஜாதகத்தை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு சுலபமாக வந்து விட முடியும். ஆனால் நம்மிடம் இருக்கும் மனக்குரங்கு எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வத்தையும் ஆசையையும் தூண்டிய வண்ணம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் துன்பத்தை கண்டு ஏற்படும் பயம் நம் மன சஞ்சலத்தை அதிகரிக்கிறது. ஒரு நல்ல ஜோதிடர் என்பவர் பணம் சம்பாதிப்பதை குறிக்கோளாக கொண்டிருக்கமாட்டார். அவருக்கு நன்றாக தெரியும் இதனால் பாவத்தை நம் கணக்கில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று. நான் கடைசியாக என்னுடைய ஜாதகத்தை பார்த்த ஜோதிடரிடம் ஒரு நல்ல ஜோதிடரை எப்படி கண்டு கொள்வது என கேட்டேன் அதற்கு அவர் அது உங்களுடைய தலைவிதியை பொறுத்தது என்றார். 

 


அன்புடன்

தா. அருள்.


Tuesday, May 2, 2023

எனது எண்ணங்கள்

          எழுதுவதில் எனக்கு ஆர்வம் ஏற்பட பல ஞாயமான காரணங்கள் இருந்தன. எழுத்து பயிற்சியை மேற்கொள்ள நோட்டு புத்தகத்தில் எனக்கு தோன்றியதை எழுத ஆரம்பித்தேன். நான் இந்த செயலை ஆரம்பித்த நாள் 07.10.2012 திரும்பி பார்க்கையில் பத்து வருடம் நிறைவடைந்துவிட்டது எனது எழுத்தார்வம் இன்று வரை குறையவில்லை என்பதில் மகிழ்ச்சி ஆனால் நான் இன்னும் நிறைய எழுதி பழக வேண்டும் என்பது தெரிகிறது. நான் முதன் முதலில் என் நோட்டு புத்தகத்தில் எழுதியதை அப்படியே இங்கு தருகிறேன். பாரதியின் வரிகளை படித்து விட்டு எழுத தொடங்கியதால் அந்த வரிகளை முதலில் தந்துவிட்டு மேற்கொண்டு தொடர்கிறேன்.


”மனமாகிய குரங்கு செய்வதையெல்லாம் எழுதிக் கொண்டு போனால் காலக்கிரமத்தில் அதைவசப்படுத்திவிடலாம் என்பது என்னுடைய கருத்து. ஒன்றை அடக்குமுன்பாக அதன் இயல்புகளையெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்மால் நன்றாக அறியப்படாததை நாம் வசப்படுத்தமுடியாது. சித்தத்தை வசப்படுத்தும் முன் சித்தத்தை அறிய வேண்டும். அதன் சலனங்களை ஓயாமல் கவனித்து எழுதிக்கொண்டு வந்தால் அதன் தன்மை முழுவதையும் அறிய ஹேதுவுண்டாகுமென்பது என்னுடைய தீர்மானம்”

     -மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

 

முதல் நாள்
07.10.2012 (ஞாயிற்றுக் கிழமை)

      இன்றிலிருந்து நான் ஒரு புதுப்பழக்கத்தை ஆரம்பிக்கிறேன். அது என்னவென்றால் எழுதுவது! அது நாட்குறிப்பா அல்லது வேறு எதாவதா என்று தெரியவில்லை. என் மனதில் பட்டதை எழுதப் போகிறேன். முதலில் என் பெயர் அருள் செல்வம். நான் ஒரு வாழப்பழ சோம்பேறி. என் வாழ்நாளில் இது போன்ற என்னற்ற பழக்கங்களை ஆர்வமாக தொடங்கி மிக விரைவிலேயே கைவிட்ட அனுபவங்கள் நிறைய உண்டு. இப்பழக்கம் எத்தனை நாள் நீடிக்கும் என்பது எனக்கு தெரியாது. இக்கனத்தில் நான் மிகுந்த ஆவலாக எழுதுகிறேன். ஒரு வேலை இப்பழக்கம் நீண்ட நாட்கள் தொடரலாம் அல்லது தொடராமலும் போகலாம். எனக்கு புத்தகங்கள் வாசிப்பதிலும் சொந்தமாக நானே எழுதுவதிலும் சமீப காலங்களில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளதால் இப்பழக்கம் நீண்ட நாட்கள் தொடர வேண்டும் என்பது என் ஆசை.

     நான் ஏன் இக்காரியத்தை இன்று தொடங்குகிறேன்? ஏனென்றால் இன்று இண்டர்நெட்டில் பாரதியை மையப்படுத்தி எழுதப்பட்ட புத்தகத்தின் விமர்சனக் கட்டுரையை படித்தேன். அது எனக்குள் சிறு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அதில் பாரதி தினந்தோறும் நாம் செய்யும் விசயங்களை எழுதி வைத்தால் நம் குணத்தை பற்றி அறிய முடியும். குணத்தை பற்றி தெரிந்து கொள்வதால் நம் தவறுகள், பலம் மற்றும் பலவீனங்களை பற்றி அறிய முடியும் என்று சொல்லி இருந்தார். இந்த விசயம் எனக்கு பிடித்திருக்கிறபடியால் இதை ஒரு சிறு முயற்சியாக மேற்கொள்கிறேன்.

      இன்று ஞாயிற்றுக் கிழமை காலை ஒன்பது நாற்பதிற்கு எழுந்தேன். மெஸ் பத்து மணிக்கு மூடி விடுவார்கள் என்பதால் பல்லை மட்டும் விலக்கிவிட்டு நேராக மெஸ்ஸிற்கு சென்று விட்டேன். காலை உணவாக கார்ன் பிளேக்ஸ் மற்றும் ஒரு டம்ளர் டீ சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் டீவி பார்த்துவிட்டு ரூமிற்கு வந்தேன்.

     துணி துவைக்க வேண்டும் என்பது இன்றைய திட்டமாக காலையில் எழுந்தவுடன் நினைத்திருந்தேன் ரூமிற்கு வந்தவுடன் கொஞ்சநேரம் இங்கிலிஷ் வார்த்தைகள் படித்தேன். அப்படியே Mp3 பிளேயரில் பாட்டு கேட்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. கொஞ்ச நேரம் கேட்டேன் அப்புறம் ஞானவானி பண்பலையில் பதிந்து வைத்திருந்த பேச்சுக்களை கேட்டேன். அடுத்து மணி சாருடைய அறிவியல் நேரம் நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் கேட்டு மொத்தமாக இரண்டு மணி நேரத்தை வீனாக்கிவிட்டேன்.

     மதியம் ஒன்று முப்பது மணிக்கு சாப்பிட்டேன் கொஞ்ச நேரம் பாட்டு கேட்டுவிட்டு தூங்கினேன். மாலை ஏழு முப்பது மணிக்கு எழுந்தேன். இன்று நான் துணி துவைக்கவில்லை ஏன் என்றால் சோம்பேறித்தனம். நாளை காலை பத்து மணிக்கு Storage  வகுப்பிற்கு நான் எந்த துணியை போட்டு போவதென்று தெரியவில்லை.

     இன்று ICC 20-20 மேட்சின் இறுதி ஆட்டம் இலங்கை மேற்கிந்திய தீவுகள் விளையாடின. எட்டு மணியிலிருந்து பார்த்துவிட்டு ஒன்பது மணிக்கு மெஸ்ஸில் இரவு உணவை முடித்தேன். மேட்ச் பத்து முப்பதிற்கு முடிந்தது. நேராக டில்டன் சார் ரூமிற்கு வந்து எஞ்சியிருந்த பிரசண்டேசன் செரிமனியை இண்டர்நெட்டில் லைவாக பார்த்தேன். வெஸ்ட் இண்டிஸ் கோப்பையை வென்றதில் எனக்கு மகிழ்ச்சி. கொஞ்ச நேரம் நெட்டில் உலவிவிட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

     இன்று  PCR அதாவது Polymer Chain Reaction கருவி DNA-வை நகலெடுக்க பயன்படுத்துகிறார்கள் ஜெராக்ஸ் மெசின் போல என்றும், எர்வின் ஸ்க்ரோடிஞ்சர் உலகத்திலுள்ள அனைத்தும் deception அதாவது மாயை போன்ற ஒன்றால் மறைக்கப்பட்டுள்ளது என்றும் Singularity, Plurality என்பது எதுவும் கிடையாது என்பதை விளக்கியிருந்ததைப் பற்றியும், அனிகிலேசன் என்ற வார்த்தைக்கு இருவர் சண்டை போட்டு கொள்கிறார்கள் என்றால் கடைசியில் யாராவது ஒருத்தர் வென்று மற்றவர் தோற்பது என்றில்லாமல் இருவரும் இறந்து விடுவதுதான் அதன் அர்த்தம் என்பதையும் புரிந்து கொண்டேன். ஆக மொத்தத்தில் உருப்படியாக இன்று ஒரு வேலையும் செய்யவில்லை அது மட்டும் உண்மை.

 


அன்புடன்
தா. அருள்.



கடிதம் 3: உணவு பற்றி காந்தியடிகள்…

 இக்கடிதம் அக்டோபர் 4, 2015 அன்று எழுதியது. 



அன்புள்ள சீனியர் அவர்களுக்கு,
     சமிபத்தில் நான் படித்த உணவு என்ற புத்தகம் என்னளவில் சில சிந்தனைகளை உணர்வுபூர்வமாக ஏற்படுத்திவிட்டது. காந்தியடிகள் மேற்கொண்ட உணவு பரிசோதனைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் விதமாக ஹரிஜன்யங் இந்தியா ஆகிய பத்ரிக்கைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம். இதை படிக்கத் தொடங்கியவுடன் உங்களுடைய ஞாபகம் தான் எனக்கு வந்தது. நான் ஒரு ஐந்து வருடங்களுக்கு மேல் உங்களுடன் பழகியிருக்கிறேன் என்ற முறையில் கவனித்த விசயம் என்னவென்றால் காந்தி அவர்கள் சொல்லியிருக்கும் உணவு சீர்திருத்த முறைகளை வெகு காலத்திற்கு முன்பே நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று இன்றுதான் எனக்கு புரிகிறது.

  உணவு பற்றிய விவாதங்கள் நம்மிடையே இதுவரை அதிகம் ஏற்பட்டதில்லை மற்ற விசயங்களைப் பற்றி நிறைய பேசியிருக்கிறோம் கோபம் வரும் அளவுக்கு கார சாரமான விவாதங்கள் நம்முள் நடந்திருக்கின்றன. அப்பொழுதெல்லாம் நான் நினைத்தது என்னவென்றால் நீங்கள் ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருப்பதனால் பழமைகளை கடைபிடிக்க நினைத்து இவ்விசயங்களை (உணவு பத்தியம்) அதிகம் யோசித்து பார்க்காமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஆனால் அது எவ்வளவு பெரிய அறியாமை என்று இன்றுதான் தெரிகிறது. ஒருவேளை நீங்கள் விவாதத்தை ஏற்படுத்தி தர்க்க ரீதியான காரணங்களை முன்வைத்திருந்தால் எனக்குள் உணவு சீர்திருத்தத்தை பற்றிய எண்ணங்கள் தோன்றியிருக்கலாம். ஆனால் வைராக்கியத்துடன் ஒரு செயலை நீண்ட நாட்கள் கடைபிடிப்பதில் எனக்கு பயிற்சிகள் இன்னும் சொல்லிக் கொல்லும் படியாக ஏற்படவில்லை என்பதையும் கூறவேண்டும். ஒருவேளை உணவு பழக்கங்களை எனக்கு புரியும் படி விளக்கி கூறியிருந்தாலும் அதை கடைபிடிக்க தயங்கியே இருப்பேன்.

   சரி நான் என்ன படித்தேன் என்பதை சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன். இவ்விசயங்கள் ஏற்கனவே தெரிந்திருந்தால் நீங்கள் உங்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும் உணவின் மீதான மதிப்பீடு மிகவும் உண்மை என்பதை உறுதிசெய்து கொள்ள உதவியாக இருக்கும்.

   காந்தி சொல்கிறார் கொஞ்சமாக சாப்பிட வேண்டும்அதை நிதானமாக பற்கலின் உதவி கொண்டு மென்று வாயில் ஊறும் எச்சில் நாம் மெல்லும் உணவுடன் நன்கு கலந்து வயிற்றுக்குள் அனுப்ப வேண்டும். முடிந்த வரையில் வெப்பத்தை பயன்படுத்தி சமைக்காமல் பச்சையாக அப்படியே சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் சத்துக்கள் நேரடியாகமுழுமையாக உடலில் சென்று சேறும். இக்காரியங்கள் நமக்கு சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் உடல் ஜீரண மணடலத்திற்கு வேலையை குறைக்க வழி செய்யும். இதனால் சமயலுக்காகும் செலவும் குறைவே. ஆதலால் உடல் ஆரோக்கியத்துடனும்உற்சாகத்துடனும் செயல்பட இவ்விசயங்கள் தீவிரமாகவைராக்கியத்துடனும் பின்பற்ற வேண்டும் என கூறுகிறார்.

   இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிதர பல அறப்போராட்டங்களை முன்னொடுத்த காந்தி உணவு விசயத்தில் மேற்கொண்ட சோதனைகளை படிக்க படிக்க ஆச்சரியப்படுத்துகிறது. மேலும் அவருடைய ஆளுமையின் மீது என்னுடைய மதிப்பும் அதிகரிக்கிறது.


அன்புடன்
தா.அருள்...