Monday, May 20, 2024

கவனத்தில் கவனம் வையுங்கள்


 

    நமது கவனத்திற்கு அளற்பறிய சக்தி இருக்கிறது. நாம் தான் அதை கவனிப்பதில்லை. பிரஞ்ஞை (கவனம், focus) தான் பிரம்மம் (or) இறைவன் என வேதம் சொல்கிறது. நாம் எப்பொழுதும் நமது கவனத்தை வெளி உலக பொருட்களின் மீதும்எதிர் மறையான சிந்தனைகள் மீதும்கடந்த கால நினைவுகள் மற்றும் வருங்கால கற்பனைகளின் மீதும் வைத்து கொண்டு இருக்கிறோம். இதை தவிர்க்க வேண்டும். ஒரு சமயத்தில் ஒருவிசயத்தில் மட்டுமே நம்மால் கவனம் செலுத்த முடியும். ஆனால் அந்த ஒரு விசயம் நீண்ட நேரம் நீடிப்பதில்லை. ஷணம் ஷணம் நமக்குள் கவனம் மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால் நமது ஆற்றல் வினாக விரைமாகிறது. மனோபலம் குறைகிறது. எதிலும் கவனத்தை செலுத்தாமல் உங்களால் இயங்க முடியாது. இதை ஆழமாக யோசித்து பாருங்கள் நான் சொல்வது புரியும். 

    கவனச்சிதறலின்றி ஒரு புத்தகதை நீங்கள் படிக்கும் போது அதிலிலுள்ள தகவல்கள் ஒரு முறை படித்தவுடனே நம் நினைவில் பதிந்துவிடுகிறது. எவ்வளவு வருடங்கள் கழித்தும் அதனை நினைவு கூர்ந்து பார்க்க முடிகிறது. முழுகவனத்துடன் படிக்கும் பொழுது ஒரு தகவலைப் படிக்க நொடிப் பொழுதுதான் ஆகிறது. அது நம் சித்தத்தில் ஆழமாக பதிந்து விடுகிறது. நமக்கு பிடித்த சினிமாவை பார்க்கும் பொழுது கவனம் முழுவதும் சினிமாவிலேயே இருப்பதால் அதில் காட்டப்படும் காட்சிகள் அப்படியே நம் மனதில் பதிந்து விடுகின்றன சாவும் வரை நமக்கு மறப்பதில்லை. இது எவ்வளவு பெரிய விசயம். இவ்வளவு பெரிய சக்தியை நமக்குள் வைத்துக் கொண்டு சரியாக பயன்படுத்த தெரியாமல் வாழ்ந்து வருகிறோம்.

      சக்தி என்பது கடவுளுக்குரிய சரியான Scientific Name. இந்த உலகத்தை காப்பது தெய்வம். இந்த உலகம் இருக்கிறது; எனவே இது ஒரு சக்தியால் காக்கப்படுகிறது. இந்த உலகம் அசைகிறது ஆதலால் ஒரு சக்தி இதை அசைக்கிறது. அந்த சக்திக்குக் கடவுள் என்று பெயர் சொல்லுகிறோம் (பதஞ்சலி யோக சூத்திரம், பாரதியார், பக்கம்  14).

சக்தியவள் இல்லாத பொருளுமில்லை.
சக்தியவள் இல்லாமல் ஏதுமில்லை.

அறிவே சக்தி; அறிவே சித்தி.

      நீண்ட நேரம் ஒரே விசயத்தில் நம் கவனத்தை செலுத்துவதற்கு தியானம் என்று பெயர். பாரதியார் பதஞ்சலி யோகசூத்திரத்திற்கு எழுதிய உரையில் இவ்வாறு கூறுகிறார். தியானத்தில் இரண்டு வகை ஒன்று இயற்கையிலுள்ள பொருட்களின் மீது கவனம் செலுத்துதல் இவைகள் ஜடங்கள் உணர்வற்றன மற்றொன்று புருஷன் (ஆத்மா) சேதனன்- அறிவுடையவன் மீது கவனம் செலுத்துதல். இயற்கை சக்திகள் சித்தத்தினுள்ளே புகும்போது அவை எண்ணங்களாக மாறுகின்றன. பதார்த்தங்களின் மீது தியானம் செய்தால் யோகசித்திகள் பிறக்கின்றன. ஒரு பொருளை நாம் முழுவதும் அறிந்து விடுவோமாயின் அது நமக்கு வசப்பட்டுவிடும். பஞ்ச பூதங்களை தியானம் செய்யும் போது அவற்றின் மீது அதிகாரம் ஏற்படுகிறது. பூதங்கள் தம்மிடமுள்ள உண்மைகளை எல்லாம் யோகிக்கு தெளிவாகக் காட்டுகின்றன. அவன் வசத்திலே ஒப்புவித்து விடுகின்றன (பதஞ்சலி யோக சூத்திரம், பாரதியார், பக்கம்  8).

  எப்பொழுதும் நம் கவனம் வெளி உலக பொருட்களின் மீதே இருக்கிறது. அதுவும் நீண்ட நேரம் இருப்பதில்லை. இந்த சலனத்தை நிறுத்த வேண்டும். அதற்கு ஆத்ம விசாரம் ஒன்றே சாதனம். வெளிமுகமாக கவனத்தை வைப்பதை தவிர்த்து. நமது உடம்பில் எங்கு எண்ணம் தோன்றுகிறதோ அந்த இடத்தில் வைக்க வேண்டும். அப்பொழுது தேவையில்லாத எண்ணங்கள் எழும் போது நாம் அதில் கவனம் செலுத்துவதை தடுக்க முடியும். ஒவ்வொரு எண்ணத்தையும் கவனமுடன் முழுவிழிப்புடன் இருந்து நசுப்பிக்க வேண்டும். இதனால் மனது பலமடைந்து ஒரே எண்ணத்தில் நீண்ட நேரம் தங்கி இருக்கும் சக்தி கிடைக்கும். கவனத்தை உள் முகமாக திருப்புவதற்கு அந்தர்முகம் என்று பெயர். இவ்வாறு செய்வதால் மனம் பேரமைதியை அடையும்.

            நாம் தினமும் ஆழ்ந்த உறக்கத்தில் எண்ணமற்று தான் இருக்கிறோம். ஏன் அது மாதிரி விழித்திருக்கும் போது நம்மால் இருக்க முடிவதில்லை. ஏனெனில் மனதில் பதிந்திருக்கும் எண்ணங்கள் கணக்கிட முடியாதவை. இவைகள் விழிப்பு நிலையில் சலனங்களை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன. விழித்திருக்கும் போதும் நாம் மனச்சலனமற்ற நிலைக்கு செல்வதற்கு தான் பயிற்சி செய்ய வேண்டும். நமது கவனத்தை எண்ணம் எழும் இடத்தில் வைத்து. எண்ணம் உதித்த உடனே இது தேவையில்லாத குப்பை என உதாசீன படுத்த பழகினால் கால கிராமத்தில் மனசலனங்கள் அடங்கும். இதைத்தான் சக்தியை காக்கும் தந்திரம் பயின்று என பாரதியார் விநாயகர் நான்மணிமாலையில் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment