Tuesday, May 2, 2023

கடிதம் 2: இசாந்தீப் சிங்...

 இக்கடிதம் அக்டோபர் 5, 2015 அன்று எழுதியது.


         நண்பா எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உண்ணுடன் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நான் பஞ்சாப்பில் படித்து கொண்டிருந்த போது இது நடந்தது. என்னுடைய வகுப்பு தோழன் பஞ்சாப் மாநிலம் சங்ரூரை பூர்வீகமாக கொண்டவன். பெயர் இசாந்தீப் சிங். பண்ணை இயந்திரவியல் துறையில் படித்து வந்தான். அவன் இளநிலை முடித்து இரண்டு வருடங்கள் தழிழ் நாட்டில் வேலை செய்த அனுபவம் பெற்றிருந்ததனால் என்னைப் பார்க்கும் போதெல்லாம் என்ன அண்ணா நல்லரிக்கிங்களா என தமிழில் கேட்பான். எனக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டிருந்ததோ அதாவது மொழி தெரியாமல் நான் படும் கஷ்டங்களை பார்த்து உணர்வுப்பூர்வமாக அவனும் இதே கஷ்டங்களை தமிழ் நாட்டில் இருந்தபோது சந்தித்திருந்ததினால் நான் அங்கு சென்றதிலிருந்தே என்னுடன் அன்பாக பழகி வந்தான்.

       என்னை பார்க்கும் போதெல்லாம் வாழ்க்கையை பற்றி அழுத்து கொள்வான் பெரும்பாலும் எதிர்காலத்தை பற்றியதாகவே இருக்கும். எப்பொழுது நிறந்தமான அரசாங்க வேலை கிடைக்குமோஎப்பொழுது கல்யாணம் ஆக போகிறதோஎன்கிற புலம்பல்கள் சில நேரங்களில் அதிகமாக கூட இருக்கும். ஆனால் மிகவும் அன்பானவன் அவனைச் சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் கூட்டம் அதிகம் இருந்து கொண்டே இருக்கும்  நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரி வாழ்க்கை மீண்டும் அமைந்ததனால் ஏற்பட்ட மகிழ்ச்சி எப்பொழுதும் கலகலப்பாக அவனிடம் இருக்கும்.

        நான் இரண்டாமாண்டு இறுதி செமஸ்டர் படிக்கும் பொழுது நடந்த சம்பவம் எனக்குள் ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்தியது. ஒரு வெள்ளிக்கிழமை இரவு சாப்பிடும் போது எப்பொழுதும் போல வாழ்க்கை பற்றிய புலம்பல்கள்,  பிராஜக்ட் வேலைகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை என பேசிவிட்டு மறுநாள் விடுமுறை என்பதால் ஞாயிற்று கிழமை நடக்கவிருந்த நண்பனின் திருமணத்திற்கு சென்றுவிட்டான். ஞாயிறு அன்று நடந்த கல்யான விருந்தில் மது அருந்திவிட்டு அவனுடைய நெருங்கிய நன்பனுடன் கார் ஓட்டிச் சென்றபோதுசாலையில் விபத்து ஏற்பட்டு அகால மரணம் அடைந்து விட்டான். செய்தி எங்களுக்கு கிடைத்தது. நான் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அவனுடைய வீட்டிற்கு சென்றிருந்தேன். ரத்தமும் சதையுமாக முகம் சிதைவடைந்த அவனுடைய உடம்பை பார்த்த போது எனக்குள் ஒர் எண்ணம் தோன்றியது. நேற்றுவரை இந்த உடம்பு எவ்வளவு மனச்சிக்கல்களுடன் இருந்ததுஇன்று எல்லாமே முடிந்துவிட்டது.  
    
        மனிதனுடைய வாழ்க்கை என்பது இவ்வளவு தானா. ஒரு அரைமணி நேரத்தில் எல்லாச் சடங்குகளும் செய்து முடித்து விட்டு பிரேதத்தை எரித்தனர். ஆனால் அன்று நான் நினைத்தேன் இன்னும் ஆறு மாதத்திற்குள் இவன் பெயரை எல்லோரும் மறந்து விடுவர். எவ்வளவோ வாய்புகள் நமக்கு இந்த பூமியில் கொடுக்கப்பட்டிருக்கிறது அதை பயன்படுத்தி ஏதாவது ஒரு வகையில் தன்னுடைய சுவடை கூட பதிக்காமல் இந்த மனிதன் இறந்து விட்டானே நமக்கும் ஒரு நாள் இப்படி முடிவு வந்து விட்டாள் என்ன செய்வது. ஆகையால் நமது வாழ்க்கை மற்றவர்களுக்கு ஏதாவது நன்மையை செய்யும் விதமாக இருக்க வேண்டும். நாம் இறந்துவிட்டாள் கூட நாம் செய்து விட்டு போகும் செயல்களினால் எப்பொழுதும் நம்மை நினைவு கூர்ந்து பார்க்கப்பட வேண்டும் என மனதிற்குள்ளே நீண்ட விவாதங்கள் இரண்டு நாள் நடந்தன. ஒரு வாரம் என்னால் சரியாக தூங்க முடியவில்லை. அதற்கு பிறகு தான் எனது நடவடிக்கைகளில் மாற்றம் வரத் தொடங்கின.

         நண்பா இதை ஏன் உனக்கு சொல்கிறேன் தெரியுமா தினமும் செய்தித்தாள்களில் மனிதர்கள் இறக்கும் செய்திகள் வந்துகொண்டுதானிருக்கின்றன. அதை படிக்கும் போதெல்லாம் எந்தவொரு சலனமும் ஏற்படாத மனது ஒரு சம்பவத்தை நேரடியாக பார்க்கும் போது மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. எனக்குள் ஒழிந்து கிடந்த ஆற்றல்களையெல்லாம் வெளிகொணர்ந்த பெருமை என் நண்பன் இசாந்தீப்பையே சாரும் என எப்பொழுதும் கருதுகிறேன்.  



அன்புடன்
தா.அருள்.

நான் எழுதிய கடிதங்கள்...

     


               பொதுவாக அடிக்கடி கடிதம் எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால் சில நல்ல கடிதங்களை நான் எழுதியுள்ளேன். வாழ்க்கையில் நான் பார்க்கும் விசயங்கள் சிலசமயம் நம் எண்ண ஓட்டத்தை மாற்றி அமைக்கப்படக்கூடிய வல்லமை படைத்தவை அப்படியான தருணங்களை என் நன்பர்களுடன் கடிதத்தின் வாயிலாக பகிர்ந்துள்ளேன். கடிதம் எழுதுவதில் உள்ள சவுகரியம் நாம் என்ன நினைக்கின்றோம் என்பதை நிதானமாக யோசித்து தகுந்த வார்த்தைகளைக் கொண்டு சொல்லிவிட முடியும். போசும் போது இது கடினம். சிலசமயம்  தப்பான வார்த்தைகள் பிரயோகம் ஆவதையும், சொல்லவந்த விசயம் மறந்து போவதையும் நம்மால் தடுக்கமுடியாது.


    நேற்று எனது மின்னஞ்சலை துளாவியபோது (மின்னஞ்சலும் கடிதம் தானே!) எப்போதோ எழுதிய சில மின்னஞ்சல்களை படிக்க நேர்ந்தது. ஒரளவிற்கு சுவாரசியம் என்னளவில் ஏற்படுத்திய அக்கடிதங்களை இங்கே தொடர் பதிவுகளாக பதிய ஆசைப்படுகிறேன். இதை ஏன் நான் செய்கிறேன் என்றால் சில நேரங்களில் மனதிலிருப்பதை வார்த்தைகளாக வடித்தவுடன் ஒரு ஆத்ம திருப்த்தி என்னுள் ஏற்படுவதை  நிறைய சந்தர்பங்களில் உணர்ந்திருக்கிறேன். அப்படி நான் உணர்ந்த தருனங்கள் தான் இக்கடிதங்கள். இன்று எதேச்சையாக இவைகளை பார்த்தவுடன் வாழ்கையின் நிதர்சணங்களுக்கும் ஒரு அழகு இருப்பதை பார்க்கமுடிகிறது. 

    ஒய்வு நேரங்களில், பொழுது போகாத சமயங்களில் இவை உங்களுக்கு குறைந்த பட்ச சுவாரசியத்தை கொடுக்கும் என நம்புகிறேன். 



அன்புடன்
தா.அருள்

Monday, May 1, 2023

பொன்னியின் செல்வன் பாகம் 2

 

     இன்று பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் பார்த்தேன். தியேட்டருக்கு சென்றல்ல; நெட்டில். தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் பழக்கம் என்றோ வழக்கொழிந்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன இங்கு அதை சொல்வதல்ல என் நோக்கம்.

     பத்து வருடத்திற்கு முன் கனடாவில் வசிக்கும் என் நண்பன் தமிழ் புத்தகங்கள் வாங்கி தரும்படி கேட்டு ஒரு பட்டியல் அனுப்பியிருந்தான். அதில் விவேகான்ந்தர் எழுதிய கர்ம யோகம் மற்றும் கல்கியின் சிவகாமி சபதம் குறிப்பிடத்தக்கவை. புத்தக வாசிப்பு தொடங்கியிருந்த காலம் அது. கதை புத்தகங்கள் மீது அதிக எனக்கு நாட்டமுமில்லை படித்ததும் இல்லை அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள் அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இவைதான் என்னோட ஏரியா.

     நன்பனுக்காக புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்திருந்தேன். புத்தகத்தை அனுப்ப இரண்டு நாட்கள் இருந்த நிலையில் எனக்கொரு சந்தேகம் ஏற்படட்து கனடாவிலிருந்து வாங்கி படிக்கும் அளவிற்கு இதில் அப்படி என்ன இருக்கிறது என்றும் அனைவரும் ஏன் கல்கியை சிலாகித்து பேசுகின்றனர் என்றும் எனக்குள் கேள்வி எழுந்தது. சுமாரன மனநிலையில் என்னதான் இருக்கிறதென்று படித்துதான் பார்ப்போமே என்று சிவகாமி சபதத்தை படிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் பக்கங்கள் போக போக புத்தகத்தை கீழே வைக்கவே மனது வரவில்லை. படிக்கும் போது மொழி நடை மற்றும் அதிக திருப்புமுனைகள் தந்த சுவாரசியம் எவ்வளவு நேரம் படித்தோம் என்று தெரியாமல் மணிக்கணக்கில் படிக்க வைத்து விட்டது அந்த புத்தகம்.

     சிவகாமி சபதம் ஒரு மணி நேரத்திலோ அல்லது ஒரு நாளில் படித்து முடிக்கக்கூடிய புத்தமல்லாததால் வேறு வேலையாக எங்கு சென்றாலும் மனதில் வீட்டிற்கு எப்போ செல்வோம் மீண்டும் விட்ட இடத்திலிருந்து எப்போது படிப்போம் என்று மனது பரபரப்பை ஏற்படுத்தியது. தவிர கதை சம்பவங்களும் கல்கியின் வார்த்தைகளும் என் மனதை நாள் முழுதும் நிரப்பி இருந்தன. புத்தகத்தை மூன்று நாட்களில் படித்து முடித்தேன் அதன் தாக்கத்திலிருந்து இயல்பு நிலைக்கு வர எனக்கு ஒருவாரம் எடுத்தது. ஏறக் குறைய பித்துபிடித்த நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. வார்த்தைகளில் வருணிக்க முடியாத ஆனந்தத்திற்கு சென்று வந்தேன். அன்றிலிருந்து கல்கி என்றாலே ஒரு பீதி எனக்குள் தொற்றிக்கொள்ளும். அதன் பிறகு நிறைய புத்தக கண்காட்சிகளுக்கு சென்று வந்திருக்கிறேன். ஒரு வார பாதிப்பிற்கு பயந்து கல்கியை வாங்காமல் தவிர்த்தே வந்திருக்கிறேன்.

     பொன்னியின் செல்வன் நாவல் நான் படித்ததில்லை ஆனால் அதை படித்தவர்கள் கூறியிருக்கும் விமர்சணங்களை நிறைய படித்திருக்கிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு மகளீர் கூட்டம் பொன்னியின் செல்வத்தில் சொல்லப்பட்ட இடங்களுக்கு சென்று தங்கள் அனுப்பவத்தை பகிர்ந்து கொண்ட வீடியோவை யூடிபில் பார்த்தேன். காலத்தை வென்று இன்றளவும் விற்பனையில் சாதனை படைக்கும் கல்கியின் நாவல்கள் சமூகத்தில் சாதரன மனிதர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் ஏராளம். ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை முழுதும் படிக்க எனக்கும் ஆசை தான் அந்த குறையை இயக்குநர் மணிரத்னம் போக்கியுள்ளார் என்றே கூறவேண்டும்.

 முதல் பாகம் பார்த்தவுடனேயே இரண்டாம் பாகத்தை கண்டிப்பா பார்த்தே ஆக வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். இம்மியளவும் சலிப்பை ஏற்படுத்தாமல் எடுக்கப்பட்டிருக்கும் படம் எதையும் குறைசொல்வதற்கில்லை குறிப்பாக சொல்வதென்றால் வசனம், இசை மற்றும் ஒளிப்பதிவு கிளாஸ். ஒரு சிக்கலான கதையை சுவாரசியம் குறையாமல் சொல்வது என்பது மிகவும் சவலான காரியம் அதில் படக்குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர். சோழ மன்னரின் வரலாறு தமிழ் கூறும் நல்லுலகம் அறிய வேண்டிய ஒன்று அதற்கு இந்த படம் ஒரு சிறந்த ஆவணம். கடும் பொருட் செலவையும் மிகுந்த உடல் உழைப்பையும் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் அனைத்து வகையிலும் மன நிறைவைத் தருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு சென்று நவீன தொழில்நுட்பத்தில் படத்தை பார்க்க முடிவு செய்திருக்கிறேன்.

அன்புடன்

தா. அருள்.


Sunday, January 1, 2023

புத்தாண்டை வரவேற்போம், 2023

2020-ல் கொரோனா வந்த பிறகு ஒவ்வொரு வருடமும் எனக்கு பீதியுடன் தான் கழிகிறது. மழை விட்டாலும் தூரல் விடவில்லை என்பது போல தினமும் செய்திகளில் புதிதாக வைரஸ் தோற்றம் பற்றியும் அதன் பரவல் பற்றியும் வருவது தவருவதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் பல பேர் வேலை இழந்தனர். பல குடும்பங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளக் குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்கனவே இருந்த பிரச்சினைகளுடன் சேர்ந்து கொண்டன. இவை எல்லாவற்றையும் சமாளிக்க விலைவாசி ஏற்றம், புதிதாக வேலைக்கு யாரையும் சேர்க்காமை, ஆட்கள் குறைப்பு போன்ற சலுகைகளை அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் மக்களுக்கு வழங்கி இன்னல்களை கலைய முயற்சித்தது. எல்லாவற்றையும் கடந்து இன்னும் நம்பிக்கை இழக்காமல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு வரும் ஆண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.

இந்த வருட்த்தில் நான் செய்ய நினைக்கும் விசயங்கள் இவை

1. அடிப்படை அறிவியல் குறிப்பாக இயற்பியல் மற்றும் கணிதம் பற்றி அதிகம் படிப்பது மற்றும் தெரிந்து கொண்ட விசயங்களை தமிழில் எழுதுவது.

2. குறைந்த விலையில் விவசாயத்திற்கு தேவையான எளிய கருவிகளை வடிவமைத்து உருவாக்குவது.

3. ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொண்டு சின்ன சின்ன பிராஜட்டுகளை செய்து கற்றுக் கொள்வது.

4. நீண்ட தூர பயணங்கள் மேற்கொண்டு இயற்கைய ரசிப்பது

5. அடுத்தவர்களுக்கு தொந்தரவு தராமல் எளிய வாழ்க்கையை வாழ முயற்சிப்பது

6. ஒற்ற கருத்துடைய நண்பர்களை வளர்த்துக் கொள்வது.

7. புத்தக கண்காட்சிகளுக்கு சென்று வருவது.

8. ஏற்கனவே வாங்கிய புத்தகங்களை படிப்பது

9. மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியா வைத்துக்கொள்வது

லிஸ்ட் ரொம்ப பெரிசா போகுது.... 

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 

அன்புடன்

தா. அருள்.

 

Sunday, December 11, 2022

கணிதம், நம்பர்

 


       அண்மையில் Seasame Street என்ற டிவி தொடரின் 123 Count with me  எபிசோடை பார்த்தேன். இது சிறுவர்களுக்கு 1,2,3-ஐ பாடல் வடிவில் சொல்லிக்கொடுக்கும் நிகழ்ச்சி. 3டி அனிமேசனாக விலங்குகளை கதாபாத்திரங்களாக வடிவமைத்துள்ளனர். அதில் ஒரு காட்சி இப்படி ஆரம்பிக்கிறது. ஒரு ஹோட்டல் மேனேஜருக்கு போன் வருகிறது எடுத்து பேசுகிறார். இரவு உணவு ஆர்டர் செய்ய வந்த தொலைபேசி. பக்கத்தில் ஹோட்டல் முதலாலி அவர் மனைவி நின்றுகொண்டிருந்தனர். மேனேஜர் முதலாலியிடம் உங்களுக்குதான் போன் என்று கொடுக்கிறார்.  எதிர் முனையில் பென்குயின்கள் நாங்கள் பசியாயிருக்கிறோம் மீன் வேண்டும் என்று சொல்கிறது. ஆர்டர் சொல்லுங்கள் குறிப்பெடுத்துக் கொள்கிறேன் என்கிறார் முதலாலி. எதிர் முனையில் மீன், மீன், மீன், மீன், மீன், மீன் என்று கூறுகிறது. ஓகே என்று போனை வைத்துவிட்டு மனைவியிடம் ஆர்டர் வந்திருக்கிறது கிச்சனுக்கு சென்று இதை சொல்லு என்று மீன், மீன், மீன், மீன், மீன், மீன் என்று மனைவியிடம் கூறுகிறார் உடனே மனைவி நினைவுகூறும் விதமாக ஆர்டரை ஒரு முறை கூறுகிறார்  மீன், மீன், மீன், மீன், மீன் இதை கவனித்த முதலாலி இல்லை இல்லை மீன், மீன், மீன், மீன், மீன், மீன் என்று திருத்தம் சொல்கிறார்.




     

இதை பார்த்துக்கொண்டிருந்த மேனேஜர் ஓ ஆர்டரை ஞாபகம் வைத்துக்கொள்ள மிகவும் சிரமபடுகிறீர்கள் உங்களுக்கு ஒரு ஐடியா தருகிறேன்  என்று கூறிவிட்டு முதலாலியிடம் ஆர்டரை சொல்லுங்கள் என கூறுகிறார். முதலாலி மீன் என்று சொன்னவுடன் மேனேஜர் ஒரு மீன் எனகூறிவிட்டு மடக்கியிருந்த கையில் ஒரு மட்டும் விரலை நிமிர்த்துகிறார். அடுத்து முதலாலி மீன் என்று சொன்னவுடன் இரண்டு மீன் என்று கூறிவிட்டு இரண்டாவது விரலை நிமிர்த்துகிறார். இப்படியே ஆறு மீன் என்று கூறி ஆறு விரலை நிமிர்த்துகிறார். இதை பார்த்த முதலாலி ஓஓ இது ரொம்ப சுலபாமா இருக்கே என கூறிவிட்டு இதே மாதிரி பர்கருக்கு செய்ய முடியுமா, பீட்சாவுக்கு செய்ய முடியுமா என மேனேஜரிடம் கேட்கிறார். இந்த முறையில் எதை வேண்டுமானாலும் எண்ண முடியும் என கூறுகிறார் மேனேஜர். ஓஓஓ நீ தான் உலகத்திலேயே சிறந்த மனிதர் என முதலாலி கூறிவிட்டு கிச்சனை நோக்கிச் செல்கிறார்.



     
நம்பர்களை எழுதுவதற்கும், எண்ணுவதற்கும் ஏன் கூறியீட்டு முறையை பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இதை விட ஒரு சிறந்த உதாரணத்தை நான் இதுவரையில் பார்த்தது இல்லை. ஆழ்ந்து யோசித்து பார்க்கையில் நடைமுறை வாழ்க்கையில் பல பிரச்சினைகளை நம்பர் சிஸ்டம் எளிய முறையில் தீர்த்து வைக்கிறது என்பதை உணர முடிகிறது. இந்த வீடியோவை பார்த்தவுடன் பள்ளிகளில் ஏன் இதுமாதிரி சொல்லிக் கொடுக்க மாட்டிகிறார்கள் என்ற ஆதங்கம் ஏற்பட்டது. சிறுவர்களுக்கும், என்னை போன்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க மிகுந்த மெனக்கெடல்களை மேற்கொண்ட Seasame Street குழுவினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.



Friday, January 21, 2022

தன்னையறிதல் என்பது என்ன?

 


தன்னையறிதல் என்பது என்ன? பற்றி ஞாநி அவர்களின் பார்வை

 

நான் யார் என்று உணர்

நம் அடையாளம் என்ன

நம் நடத்தை என்ன

நம் இயல்புகள் என்ன

நம் பலங்கள் எவை

நம் பலவீனங்கள் எவை

விருப்பங்கள் எவை

வெருப்புகள் எவை

 

என்று நம்மை பற்றி எல்லாவற்றையும் நாம் அறிந்திருப்பதே தன்னையறிதல் ஆகும். இவை எல்லாம் தெரிந்திருந்த்தால் தான் எப்போது நமக்கு வாழ்க்கை அழுத்தமாக இருக்கிறது பாரமாக இருக்கிறது என்பதை, ஏன் அப்படி இருக்கிறது என்பதையெல்லாம் உணர முடியும். நம்மிடம் சில கோலாருகள் இருக்கலாம் ஆனாலும் எனக்கு என்னை பிடிக்கும் ஏனென்றால் என்னிடம் பல நல்ல குணங்களும் இருக்கின்றன. முழுமையாக நம்மை நாமே அறிவதற்கு இரண்டு அம்சங்களை கவனிக்க வேண்டும் முதலாவது நம்மை பற்றின நம் பலம் மற்றும் பலவீனம் திறமை சிக்கல்கள் பற்றி எல்லாம் நாமே என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்பது. இரண்டாவது அம்சம் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நாம் நினைத்து வைத்திருப்பது இரண்டும் சேர்ந்துதான் நாம்.

 

நினைப்பு:  நான் ஒருவிசயத்தில் எப்படிப்பட்டவன் என்று நாம் நினைப்பது

நிஜம்:     அசலாக இந்த விசயத்தில் நான் எப்படி இருக்கிறேன் என்பது

லட்சியம்:  அந்த விசயத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று  

           விரும்புகிறோம் என்பது

 

 

அன்புடன்

தா.அருள்

நிறைவான வாழ்வு என்பது என்ன?

 


சமீபத்தில எனக்குள் நடந்த விவாதம் நிறைவான வாழ்க்கை வாழ்வது என்றால் என்ன? அது எல்லோருக்கும் சாத்தியமானதா? என்று. இக்கேள்வி எனக்குள் வர காரணங்கள் இருக்கின்றன. அன்றாடம் நான் பார்க்கும், பழகும் மனிதரகளின் வாழ்க்கை முறைகளை கவனிக்கும் பொழுது ஒரு விசயம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது பெரும்பாலனவர்கள் மன நிம்மதியுடன் வாழவில்லை. பிரச்சினைகள் பலவிதங்களில் மனித மனத்தை நிம்மதி இழக்கச் செய்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றபடியால் இக்கேள்வி எனக்குள் எழ நியாயங்கள் இருப்பதாகவே தோன்றுகிறது, இதை இப்படி கூட சிந்திக்கலாம் நாம் எல்லோரும் ஒரு நாள் இறக்க போகிறோம் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் அது கண்டிப்பாக நடக்கத்தான் போகிறது என்கிறபட்சத்தில் நாம் இங்கு சம்பாதிக்க போராடும் பேர், புகழ், பணம் நிரந்தரமானது கிடையாது. இப்படி இருக்கையில் மனித வாழ்க்கை என்பது உண்மையில் என்ன? இவைகள் ஆரம்பத்தில் எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. இன்றைய மனநிலையில் நிறைவான வாழ்வை பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.

     

     மனித வாழ்க்கை என்பது சராசரியாக 80 வருடங்கள். பூமியின் ஆயுளை பொருத்த மட்டில் இது மிக மிக சொர்ப்பம். இங்கே நாம் ஏன் பிறந்தோம் என்ற கோள்விக்கு விடை கிடையாது. நமக்குள் ஏற்படும் எண்ணங்களுக்கும் நமது நடத்தைகளுக்கும் சூழ்நிலை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது, நம்மை சுற்றி நடப்பவைகள் நம்மை மனதளவில் பாதிக்கின்றன. சில பாதிப்புகள் நமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் சில பாதிப்புகள் துன்பம் அளிப்பதாகவும் இருக்கின்றன. நமது வாழ்க்கை இந்த இன்பதுன்பத்திற்குள் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. இப்படி இருக்கையில் இந்த வாழ்க்கையை நிறைவாக ஆக்கிக் கொள்ளவது பற்றி பொரும்பாலோனோர் சிந்திப்பதே இல்லை (இதில் நானும் அடங்குவேன்) என்னை பொருத்தவரை மனதிற்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய விசயங்கள் (உதாரணத்திற்கு நான் ஒரு ஆராய்ச்சியாளனாக வேண்டும் என்று மனதிற்குள் தோன்றுவது, நான் ஒரு சிறந்த விளையாட்டு வீரனாக ஆக வேண்டும் என்று என்னுவது போன்றவைகள்) எவை எவை என கண்டறிந்து அவைகளில் ஒன்றை மனதிற்குள் இலட்சியமாக வைத்து அவற்றிற்காக நமது நேரத்தையும் ஆற்றலையும் அதிகம் செலவு செய்ய வேண்டும் என்பது  முக்கியமாக படுகிறது. மற்றவர்களுக்காக சமூதாயம் என்ன நினைக்குமோ என்று என்னி நமக்கு விருப்பமில்லாதவைகளை செய்யும் பொழுதுதான் மனம் நிம்மதியை இழக்கிறது.

 

மனதிற்கு விருப்பமான விசயங்களை மட்டும் செய்து 80 வருடங்கள் வாழ்ந்து மறைந்தவர்களுடைய வாழ்க்கையை கூர்ந்து கவனிக்கையில் அவர்களுடைய வாழ்க்கை தன்னளவில் நிறைவை அளித்தது மட்டுமில்லாமல் அடுத்தவருக்கும் பயனுள்ள வகையில் அமைந்திருப்பதை உணர முடியும். இதற்கு உதாரணங்கள் நிறைய இருக்கின்றன.

 

ஆக நிறைவான வாழ்க்கை என்பது எல்லோருக்கும் சாத்தியமே இவ்வாழ்கை வாழ நமது சிந்தனையில் மாற்றம் வர வேண்டும். சில புரிதல்களை மாற்றிக்கொள்ள வேண்டும். நம்மை நாமே சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் அவ்வளவே. மானிடராய் பிறத்தல் என்பது அரிதான வாய்ப்பு அது நமக்கு கிடைத்திருக்கும் போது அதை நிறைவான முறையில் பயன்படுத்திக் கொள்ளவதே சரியான அனுகுமுறையாக இருக்க முடியும். நம்மிடம் இருக்கும் குறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், நல்ல விசயங்களுக்கு அதிக நேரத்தை செலவளித்து செயல் வடிவம் கொடுக்க முயற்சி செய்தால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக நல்ல விசயங்கள் (இதை நாம் நம்முடைய பலம் என்று கூட சொல்லலாம்) நம்முள் நுழைந்து நம்மை நிறைவான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்லும்.

 

இது என் கருத்து. இதைப் பற்றின உங்களுடைய நிலைப்பாடு என்ன? 

    

அன்புடன்

தா. அருள்