Monday, May 20, 2024

கவனத்தில் கவனம் வையுங்கள்


 

    நமது கவனத்திற்கு அளற்பறிய சக்தி இருக்கிறது. நாம் தான் அதை கவனிப்பதில்லை. பிரஞ்ஞை (கவனம், focus) தான் பிரம்மம் (or) இறைவன் என வேதம் சொல்கிறது. நாம் எப்பொழுதும் நமது கவனத்தை வெளி உலக பொருட்களின் மீதும்எதிர் மறையான சிந்தனைகள் மீதும்கடந்த கால நினைவுகள் மற்றும் வருங்கால கற்பனைகளின் மீதும் வைத்து கொண்டு இருக்கிறோம். இதை தவிர்க்க வேண்டும். ஒரு சமயத்தில் ஒருவிசயத்தில் மட்டுமே நம்மால் கவனம் செலுத்த முடியும். ஆனால் அந்த ஒரு விசயம் நீண்ட நேரம் நீடிப்பதில்லை. ஷணம் ஷணம் நமக்குள் கவனம் மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால் நமது ஆற்றல் வினாக விரைமாகிறது. மனோபலம் குறைகிறது. எதிலும் கவனத்தை செலுத்தாமல் உங்களால் இயங்க முடியாது. இதை ஆழமாக யோசித்து பாருங்கள் நான் சொல்வது புரியும். 

    கவனச்சிதறலின்றி ஒரு புத்தகதை நீங்கள் படிக்கும் போது அதிலிலுள்ள தகவல்கள் ஒரு முறை படித்தவுடனே நம் நினைவில் பதிந்துவிடுகிறது. எவ்வளவு வருடங்கள் கழித்தும் அதனை நினைவு கூர்ந்து பார்க்க முடிகிறது. முழுகவனத்துடன் படிக்கும் பொழுது ஒரு தகவலைப் படிக்க நொடிப் பொழுதுதான் ஆகிறது. அது நம் சித்தத்தில் ஆழமாக பதிந்து விடுகிறது. நமக்கு பிடித்த சினிமாவை பார்க்கும் பொழுது கவனம் முழுவதும் சினிமாவிலேயே இருப்பதால் அதில் காட்டப்படும் காட்சிகள் அப்படியே நம் மனதில் பதிந்து விடுகின்றன சாவும் வரை நமக்கு மறப்பதில்லை. இது எவ்வளவு பெரிய விசயம். இவ்வளவு பெரிய சக்தியை நமக்குள் வைத்துக் கொண்டு சரியாக பயன்படுத்த தெரியாமல் வாழ்ந்து வருகிறோம்.

      சக்தி என்பது கடவுளுக்குரிய சரியான Scientific Name. இந்த உலகத்தை காப்பது தெய்வம். இந்த உலகம் இருக்கிறது; எனவே இது ஒரு சக்தியால் காக்கப்படுகிறது. இந்த உலகம் அசைகிறது ஆதலால் ஒரு சக்தி இதை அசைக்கிறது. அந்த சக்திக்குக் கடவுள் என்று பெயர் சொல்லுகிறோம் (பதஞ்சலி யோக சூத்திரம், பாரதியார், பக்கம்  14).

சக்தியவள் இல்லாத பொருளுமில்லை.
சக்தியவள் இல்லாமல் ஏதுமில்லை.

அறிவே சக்தி; அறிவே சித்தி.

      நீண்ட நேரம் ஒரே விசயத்தில் நம் கவனத்தை செலுத்துவதற்கு தியானம் என்று பெயர். பாரதியார் பதஞ்சலி யோகசூத்திரத்திற்கு எழுதிய உரையில் இவ்வாறு கூறுகிறார். தியானத்தில் இரண்டு வகை ஒன்று இயற்கையிலுள்ள பொருட்களின் மீது கவனம் செலுத்துதல் இவைகள் ஜடங்கள் உணர்வற்றன மற்றொன்று புருஷன் (ஆத்மா) சேதனன்- அறிவுடையவன் மீது கவனம் செலுத்துதல். இயற்கை சக்திகள் சித்தத்தினுள்ளே புகும்போது அவை எண்ணங்களாக மாறுகின்றன. பதார்த்தங்களின் மீது தியானம் செய்தால் யோகசித்திகள் பிறக்கின்றன. ஒரு பொருளை நாம் முழுவதும் அறிந்து விடுவோமாயின் அது நமக்கு வசப்பட்டுவிடும். பஞ்ச பூதங்களை தியானம் செய்யும் போது அவற்றின் மீது அதிகாரம் ஏற்படுகிறது. பூதங்கள் தம்மிடமுள்ள உண்மைகளை எல்லாம் யோகிக்கு தெளிவாகக் காட்டுகின்றன. அவன் வசத்திலே ஒப்புவித்து விடுகின்றன (பதஞ்சலி யோக சூத்திரம், பாரதியார், பக்கம்  8).

  எப்பொழுதும் நம் கவனம் வெளி உலக பொருட்களின் மீதே இருக்கிறது. அதுவும் நீண்ட நேரம் இருப்பதில்லை. இந்த சலனத்தை நிறுத்த வேண்டும். அதற்கு ஆத்ம விசாரம் ஒன்றே சாதனம். வெளிமுகமாக கவனத்தை வைப்பதை தவிர்த்து. நமது உடம்பில் எங்கு எண்ணம் தோன்றுகிறதோ அந்த இடத்தில் வைக்க வேண்டும். அப்பொழுது தேவையில்லாத எண்ணங்கள் எழும் போது நாம் அதில் கவனம் செலுத்துவதை தடுக்க முடியும். ஒவ்வொரு எண்ணத்தையும் கவனமுடன் முழுவிழிப்புடன் இருந்து நசுப்பிக்க வேண்டும். இதனால் மனது பலமடைந்து ஒரே எண்ணத்தில் நீண்ட நேரம் தங்கி இருக்கும் சக்தி கிடைக்கும். கவனத்தை உள் முகமாக திருப்புவதற்கு அந்தர்முகம் என்று பெயர். இவ்வாறு செய்வதால் மனம் பேரமைதியை அடையும்.

            நாம் தினமும் ஆழ்ந்த உறக்கத்தில் எண்ணமற்று தான் இருக்கிறோம். ஏன் அது மாதிரி விழித்திருக்கும் போது நம்மால் இருக்க முடிவதில்லை. ஏனெனில் மனதில் பதிந்திருக்கும் எண்ணங்கள் கணக்கிட முடியாதவை. இவைகள் விழிப்பு நிலையில் சலனங்களை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன. விழித்திருக்கும் போதும் நாம் மனச்சலனமற்ற நிலைக்கு செல்வதற்கு தான் பயிற்சி செய்ய வேண்டும். நமது கவனத்தை எண்ணம் எழும் இடத்தில் வைத்து. எண்ணம் உதித்த உடனே இது தேவையில்லாத குப்பை என உதாசீன படுத்த பழகினால் கால கிராமத்தில் மனசலனங்கள் அடங்கும். இதைத்தான் சக்தியை காக்கும் தந்திரம் பயின்று என பாரதியார் விநாயகர் நான்மணிமாலையில் குறிப்பிடுகிறார்.

Wednesday, May 15, 2024

தாரணை பழகுங்கள்


 

தாரணை என்பது ஒன்றைப் பற்றிய தீவிர எண்ணம். ஆன்மீகத்தின் இறுதிநிலை சமாதி (எண்ணமற்ற நிலை). அன்றாட வாழ்வில் நமது மனம் சதா சர்வ காலமும் எதையாவது நினைத்துக் கொண்டும் சிந்தனை செய்து கொண்டும் இருக்கிறது. சிந்தனையும் ஷணம் ஷணம் மாறிக்கொண்டே இருக்கிறது. இதை மனச்சலனம் என்று கூறுகின்றனர். மனது சலனப்படுவதால் எதாவது ஒரு விசயத்தில் மட்டும் மனதை நீண்ட நேரம் குவித்து (concentration) வைக்க முடிவதில்லை. ஒரு புத்தகத்தை கவனச் சிதறலில்லாமல் படித்தால் அதில் உள்ள தகவல்கள் மனதில் உடனே பதிகின்றன. எப்பொழுது கேட்டாலும் நம்மால் நினைவுபடுத்தி சொல்லமுடிகிறது. நாம் கவனச் சிதறலின்றி எந்த செயலை செய்தாலும் மிக நேர்த்தியாக விரைவில் செய்து முடிக்க முடிகிறது. யோசித்து பாருங்கள் நமது கவனத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. தாரனை பழகினால் நினைத்ததை சாதிக்க முடியும். நமது எண்ணத்திற்கு அத்தனை வலிமை உண்டு என்கின்றனர் யோகிகள்.

 

இதற்கு இரண்டு விதமான பயிற்சிகள் தேவை.

 

  1. மனதின் ஓட்டத்தை எப்பொழுதும் கவனித்து கொண்டு இருத்தல்

இப்படி செய்வதால் தேவையில்லாத சிந்தனை எழும்போது விழிப்புடன் இருந்து சலனத்தை தடுக்க முடியும்.

 

  1. எதிர்மறையான எண்ணங்களை (negative thoughts) எழவிடாமல் தடுப்பது

ஒருநாளில் நமது சிந்தனையில் வரும் 85% எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்கள் தான். ஒரு விசயத்தை தொடங்க ஆசை ஏற்பட்டால் உடனே அதைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் தன்னிச்சையாக உருவாகின்றன. இந்த உலகத்தில் நல்லது என்றும் கெட்டது என்றும் எதுவும் கிடையாது. நமது மனமே அவ்வாறான தோற்ற பிம்பங்களை தோற்றுவிக்கின்றன.

 

எதிர்மறை சிந்தனைகள் மனவலிமையை குறைத்துவிடுகிறது. மேலும் உடல் சோர்வையும் ஏற்படுத்துகிறது. நோய் நெடிகளை உண்டு பண்ணுகிறது. மனவலிமை குறைந்தால் தாரணை கைகூடாது. எதிர்மறை எண்ணங்கள் மனதை சலனமில்லாமல் ஒரே விசயத்தில் குவிப்பதை தடுக்கிறது.

 

சுவாமி சிவானந்தா Thoughts power (எண்ணத்தின் ஆற்றல்) என்ற புத்தகத்தில் இதைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார் மேலை நாட்டினர் law of attraction என்று இதை கூறுகின்றனர். நீ எதை வேண்டும் என்று நினைக்கிறாயோ அது தானாகவே உன்னை வந்து சேரும். வேதாந்திகள் பிரம்மத்தின் மீது கவனத்தை குவியுங்கள் நீங்கள் கடவுளாக மாறிவிடலாம் என்கின்றனர். அஞ்ஞானிகளோ பணம் வேண்டும், புகழ் வேண்டும் என்று தங்களது எண்ணங்களை குவிக்க ஆசைப்படுகின்றனர். இதற்கு காரணம் இறைவனைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததுவே.

 

யத் பாவம் தத் பவதி (நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறிவிடுவாய்) என்பது பிரபஞ்சத்தின் பொதுவான விதி. எல்லா விசயங்களுக்கும் இந்த விதி வேலை செய்யும். மனதை சலனப்படாமல் வைத்தால். எதிர்மறை எண்ணங்களை உருவாக விடாமல் தடுத்தால் இது சாத்தியம். பெரிய சிரமம் எதுவு இதில் இல்லை. ஆர்வமும் முயற்சியும் இருந்தால் உலகம் உங்கள் கையில். ஆகவே தாரணை பழகுங்கள் வாழ்கை மாறுவதை நீங்கள் உணர்வீர்கள்.

Tuesday, April 16, 2024

மனோ நிக்ரகமே ஆன்மீகத்தின் மேலான முடிவு


     Healing Power என்ற தலைப்பில் என். கணேசன் அவர்களுடைய வீடியோவை யூடிபில் பார்த்தேன். பார்த்தவுடன் ஆன்மீகத்தை பற்றிய என்னுடைய சந்தேகங்கள் முழுமையாக நீங்கிவிட்டன.

     ஆன்மீகம் ஆற்றல் (Energy) பற்றியும், மனிதனுடைய மனதை பற்றியும் பேசுகிறது. Electrical Energy, Wind Energy, Heat Energy போன்ற பலவகையான Energy பற்றி அறிவியலில் படிக்கிறோம். Energy-ஐ பார்க்க முடியாது ஆனால் உணர முடியும். உதாரணத்திற்கு காற்றை எப்படி நம் கண்களால் பார்க்க முடியாமல் உணர மட்டும் முடிகிறதோ அது மாதிரி ஆற்றலை உணர மட்டுமே முடியும்.

     இந்த உலகம் ஒரு பேராற்றலின் வெளிப்பாடு இதிலிருந்து பல உப ஆற்றல்கள் வெளிப்படுகின்றன. இயற்பியலில் Black hole (கருந்துளை) என்ற கருத்து உள்ளது. வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் ஆயுள் முடிந்தவுடன் அதில் உள்ள எல்லா ஆற்றல்களும் ஒன்று திரண்டுவிடும். அதனருகில் நாம் சென்றால் நம்மை இழுத்துக் கொள்ளும். ஆனால் வெறும் கண்களால் கருந்துளையை பார்க்க முடியாது. அதுபோல பேராற்றலை பார்க்க முடியாது உணர முடியும். இதற்கு ஆத்மா, கடவுள், பிரம்மம், இறைவன் என பல பெயர்களை வைத்து கூறுகின்றனர். இந்த பேராற்றலுக்கு உருவமோ, குணங்களோ எதுவும் கிடையாது. இருப்பு மாத்திரம் உண்டு நாம் ஆழ்ந்த தூக்கத்தில் உடல், மனம் என்கிற பிரஞ்ஞையற்று இருப்பு மாத்திரமாக உள்ளோம். விழிப்பு நிலையிலும் இதுபோல இருந்தால் ஆனந்தமாக இருக்கும். அதுதான் பிரம்மத்தின் நிலை. மனிதர்கள் இந்த நிலையில் பேராற்றலை உணர்ந்து கொள்ள முடியும் என்கின்றனர் இதுதான் ஆச்சரியம். இதற்கு மனதை சலனப்படாமல் நிச்சலனமாக சதா சர்வகாலமும் வைத்துகொள்ள வேண்டும். இதுதான் உபதேசம். இதுதான் ஆன்மீகம் கூறும் முடிவான கருத்து.

இரண்டு கேள்விகள் மனதில் எழலாம்

1. மனதை எப்பொழுதும் சலனமில்லாமல் வைத்துக் கொள்ளமுடியுமா?

2. பேராற்றலை உணர்ந்து கொள்வதினால் நமக்கு என்ன பயன்?

     முதல் கேள்விக்கு பதில் கண்டிப்பா முடியும். நீண்ட நாட்கள் பயிற்சி செய்வதன் மூலம் மனதை நிச்சலனமா வைத்துக் கொள்ள முடியும். இதற்கு விவேகம் மற்றும் வைராக்கியம் வேண்டும். விவேகம் என்றால் ஆத்ம விசாரம் என்று பொருள். இந்த உலகத்தில் நிலையானது எது? நிலையற்றது எது? என்பது பற்றிய விசாரம். பேராற்றலின் (கடவுள்) இருப்பு மட்டுமே நிலையானது. உண்மையானதும் கூட. அது தோன்றவும் இல்லை மறைய போவதும் இல்லை எப்பொழுதும் நிலையாக இருந்து கொண்டே (Infinite) இருப்பது. உலகத்தில் மற்றவை எல்லாம் தோன்றி மறையும் தன்மை கொண்டதாக உள்ளன. உடல், மனம், புலன்கள், உயிருள்ளவை, உயிரற்றவை எல்லாம் தோன்றி மறையும் தன்மை கொண்டதாக உள்ளன. நாம் நிலையில்லாதவைகளை நிலையானது (உண்மையானது) எனக் கருதிக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். இதுதான் பிரச்சினை.

     இதனால் பலவகைப்பட்ட விசயங்களில் ஈடுபட்டு மனதை எப்பொழுதும் சலனமாக வைத்துள்ளோம். நமக்கு ஆத்ம அநாத்ம விசயங்களில் விவேகம் வந்துவிட்டதென்றால் சலனம் படிப்படியாக குறைந்து நிச்சலன நிலையை அடைந்து விடுவோம். இதற்கு குருவின் துணையும் சத்சங்கத்தில் ஈடுபாடும் சாஸ்திரத்தின் மீது முழு நம்பிக்கையும் வேண்டும். இவ்வளவு இருந்தாலும் நிச்சலன நிலையை அடைய கொஞ்ச காலம் பிடிக்கும். ஆத்ம விசாரத்தை நிறுத்தாமல் நிச்சலன நிலையை அடையும் வரை தொடர்ந்து செய்வதற்கு வைராக்கியம் என்று பெயர்.

இதனால் என்ன பயன்

     முதல் பயன் எப்பொழுது சந்தோசமாக மனச்சோர்வின்றி உற்சாகமாக வாழமுடியும். உற்சாகமான மனநிலையில் மனதை நிச்சலனமாக வைத்து செய்யப்படும் எந்த ஒரு வேலையும் மிக நேர்த்தியாக முடியும். நோய் நொடிகள் நமக்கு வராது. அறிவியல் சொல்கிறது உடலிற்கும் மனதிற்கும் நேரடி தொடர்பு இருக்கிறது என்று (Direct Relationship) ஒன்று பழுதானால் மற்றொன்றும் பாதிக்கப்படும். சலனத்திலிருந்து நிச்சலனத்திற்கு சென்றுவிட்டால் பேராற்றல் நமக்குள்ளே உறையும் என்கின்றனர். இதனால் சக்தி மிகுந்தவர்களாக மாறிவிடுவோம். அடுத்தவர்களின் நோய்களை குணப்படுத்த முடியும். எதிர்காலத்தை பற்றி அறிய முடியும், தொலைவில் உணர்தல் (Telepathy) போன்ற சித்திகள் வாய்க்கப் பெறுவோம். மேலும் பல சித்திகள் (ஆற்றல்கள்) நமக்கு கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.

     இவ்வளவு இருந்தாலும் நமது மரணத்தை தடுக்க முடியாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் நிச்சலனமா இருக்கிறபோது இறை ஆற்றலுடன் ஒன்றினைந்து இருப்போம் இருந்தாலும் அண்ணமய கோசம் என்று சொல்லக்கூடிய உணவினால் உண்டான இந்த மாமிச உடல் அழியக்கூடியதே. இதுவே இறைவனின் படைப்பு. ஆனால் நமது ஆன்மா என்று சொல்லக்கூடிய ஆதார ஆற்றலுக்கு அழிவில்லை. உலக இன்பங்கள் நிலையில்லாதவை தோன்றி மறையக்கூடிய தன்மை கொண்டவை என்கிற அனுபவத்தை பெறுவதற்காக இந்த உடல் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 வந்த வேலையை (இறைவனை உணர்தல்) பார்ப்பதற்காக நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாடகை வீடே நமது உடல். இது கால எல்லைக்கு உட்பட்டது. உடல் அழியும் முன் இறைவனை உணர முயற்சி செய்து வெற்றியடைவதே வாழ்க்கையின் நோக்கம். உயரிய நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள இந்த உடலை வைத்துக் கொண்டு என்னவெல்லாமோ செய்து இன்ப துன்ப இரட்டைகளில் சிக்கி மன சலனத்துடன் வாழ்வது அறியாமை.

இறை உணர்தல் தான் இறுதி இலக்கு ஒரு ஜீவனுக்கு அது வாய்க்கப்பெறும் வரையில் பிறவி சுழற்சி இருந்து கொண்டே இருக்கும் என வேதம் கூறுகிறது. ஏனெனில் உலக வாழ்க்கையில் நாம் பெறும் அனுபவங்கள், நிறைவேறாத ஆசைகள் நமது சித்தத்தில் பதிந்துள்ளது. ஆசைகளை பூர்த்தி செய்து அனுபவத்தைபெற பிறப்பு கொடுக்கப்படுகிறது.

நன்றாக யோசித்து பாருங்கள் மனிதனுடைய ஆசைக்கு முடிவு உண்டா என்று. ஒரு ஆசை மனதில் தோன்றினால் அது நிறைவேற என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ; என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறோம். அந்த ஆசை நிறைவேறியவுடன் அடுத்த ஆசையை நோக்கி பயணிக்கிறோம். ஆசைக்கு ஏது எல்லை. மனித ஆசைகள் ஒருபோதும் முற்றுபொறாது என்றாலும். இதில் சிக்கிக் கொண்டு பிறவிகள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அறியாமை நீங்கி அறிவு நிலைபெற்றால் தான் இந்த சுழற்சி நீங்கும். ஆசையே துன்பத்திற்கு காரணம்.

     என். கணேசனுடைய வீடியோவை பார்த்து நான் தெளிந்து கொண்டதை கூறுகிறேன். வேதம் கூறுகிறது இறையாற்றல் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்று அப்படி இருக்கையில் இறை உணர்தல் ஏன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நடைமுறை வாழ்க்கையில் இயல்பாக மனதை நிச்சலனமாக வைத்துக்கொள்ளவும் முடிவதில்லை. இது ஒரு முரண். அமெரிக்காவில் உள்ள கார்னிவெல் பல்கலைக் கழகத்தில் இது சம்மந்தமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு நபர்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். ஒருவர் பயிற்சியின் மூலம் மனதை நிச்சலனமாக வைத்துள்ளவர். மற்றொருவர் நம்மை போன்ற சாதாரண மனிதர். இருவரிடமும் ரசாயணம் கலந்த தண்ணீர் குடுவையை (நுண்கிருமிகள் கொள்ளப்பட்டு) இருவரிடமும் கொடுத்து அரைமணி நேரம் தங்களது இரு கைகளுக்குமிடையில் வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். அரைமணி நேரம் கழித்து குடுவையை சோதனைச் சாலையில் வைத்து ஆய்வு செய்து பார்த்ததில் மனதை நிச்சலனமாக வைத்திருந்த நபரின் குடுவையில் நுண்கிருமிகள் மீண்டும் உயிர்பெற்றிருப்பதையும் சாதாரண நபரிடம் கொடுத்த குடுவையில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் இருந்ததும் தெரிய வந்தது. மேலும் மன நிச்சலனத்துடன் இருக்கும் நபர் தொடுதலின் மூலம் கேன்சர் செல்கள் குணமாவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கணேசன் வீடியோவில் கூறினார். கண்டிப்பாக அவர் பொய் கூறவில்லை. இதனை சரிபார்த்துக் கொள்ள நமக்கு நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

நான் கடந்த ஐந்து வருடங்களாக ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டு உபநிஷத், பகவத் கீதை, பதஞ்சலி யோகசூத்திரம் மற்றும் ஆதி சங்கருடைய பிரகரண கிரந்தங்களை ஆழமாக படித்தேன். மேலும் என் சத்குருநாதர் பிரம்ம ஸ்ரீ க.மணி அவர்களின் சத்சங்கத்தில் தவறாது கலந்துகொண்டேன். மேலும், பிரம்ம ஸ்ரீ நொச்சூர் வெங்கடராமன், பிரம்ம ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், பிரம்ம ஸ்ரீ மணி டிராவிட், பிரம்ம ஸ்ரீ இராம சுப்பிரமணியன் போன்றோரின் சத்சங்கத்தையும் யூடியூபில் அதிகம் பார்த்துள்ளேன். எனக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால் புனித நூல்கள் அனைத்தும் மனோ நிக்ரகத்தையே முடிவாக கொண்டுள்ளன என்பதுவே.

இவ்வளவு நாள் வேறு வேறு விதமாக பிரம்மத்தைப் பற்றிய விளக்கங்களை கேட்ட எனக்கு எங்கும் எதிலும் இருக்கும் பிரம்மத்தை சலனப்பட்ட மனதிலும் உணர முடியும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் ஆதார தன்மையில் நாம் பிரம்ம்மாக இருந்தாலும் மனோ நிக்ரகமின்றி இறை உணர்தல் சாத்தியமே இல்லை என கணேசன் அவர்களின் வீடியோவை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன்.

நான் ஒரு அறிவியல் மாணவன் சோதனைகள் மூலமாகவும் பிரத்யட்சமாக (நேரில்) பார்ப்பதின் மூலமாகவும் என்னால் எதையும் ஆழமாக புரிந்துகொள்ள முடிகிறது. ஆன்மீகத்தில் இன்னும் அதிகம் நாட்டம் கொள்ளவும் முனைப்புடன் மனோ நிக்ரகத்திற்காக ஆத்ம விசாரம் செய்யவும் இந்த வீடியோ அதிக நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

பகவத்கீதை முழுவதும் யோக வாழ்க்கையை கடைபிடிக்க வலியுறுத்துகிறது. யோகம் என்றால் இணைதல் அல்லது லயப்படுதல் என்று பொருள். ஜீவாத்மாவும் (மனது) பரமாத்மாவும் (இறைசக்தி) எப்பொழும் ஒன்றாக இணைந்திருத்தலுக்கு யோகம் என்று பெயர். யோக நெறியில் நின்று தொழில் புரி. இதுவே கீதையின் சாரம். இன்பமும் துன்பமும் நீயே ஏற்படுத்திக் கொண்டவை. ஆனால் இவை வெளி பொருட்களின் மூலம் தான் கிடைக்கின்றது என்ற கற்பனை உன்னிடத்தில் உள்ளது. இவைகளே ஆசை மற்றும் மோகத்திற்கு அடிப்படை காரணம். ஆசைகள் மனிதனிடத்தில் பேரழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் கர்மங்களில் (செயல்களில்) ஈடுபட்டு சிக்கலில் (மன உலச்சலில்) மாட்டிக் கொள்கிறோம். செயல்கள் செய்யாமல் வாழ முடியாது. ஆனால் பலனை எதிர்பார்க்காமல் கர்மங்களை செய்ய முடியும். ஜீவாத்மாவும், பரமாத்மாவும் அடிப்படையில் ஒன்றே. இத்தத்துவத்தை புரிந்து கொண்டு மனதை ஆத்மாவிடம் ஒப்படைத்துவிட்டு சலனமில்லாமல் அமைதியாக இரு என்பதுவே கருத்து.

இந்த உலகத்தில் மதிப்பு மிக்கது பொண்ணோ, பொருளோ, பணமோ, புகழோ கிடையாது. மன நிம்மதிக்கு (நிச்சலனத்திற்கு) ஈடு இணை எதுவும் இல்லை. பயிற்சியின் மூலம் படிப்படியாக மன நிச்சலனத்தை கொண்டு வருவதே எல்லோருடைய நோக்கமாக இருக்க வேண்டும் இதைத்தான் உண்மையான ஆன்மீகம் கூறுகிறது. இந்நிலையை அடைய அதிக காலம் ஆகலாம். பொறுமையும் விடாமுயற்சியும் தத்துவத்தில் நம்பிக்கையும் இருந்தால் இலக்கை அடைவது சுலபம்.

 

 

பின்குறிப்பு:

     இந்த உலகம் நேர்மறை சிந்தனைகளால் ஆக்கப்பட்டுள்ளது. யத் பாவம் தத் பவதி (நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறிவிடுவாய்) இந்த இரண்டு கருத்தும் ஆழம் மிகுந்தவை. அடிக்கடி நினைவுகூறத்தக்கவை.

Saturday, August 12, 2023

பாரதியார் ஒரு அத்வைத வேதாந்தி


    பாரதியின் வேத முகம் என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். சு. கோதண்டராமன் எழுதிய இந்த புத்தகம் வலையில் இலவசமாக கிடைத்தது. பலமுகம் கொண்ட பாரதியின் ஆன்மீக முகத்தை குறிப்பாக கடவுள், வேதம் இவைகளைப் பற்றிய பாரதியின் நிலைப்பாட்டை கூறும் வகையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளதால் என் கவனத்தை ஈர்த்தது. பாரதியின் வாழ்க்கை வரலாற்றை புரிந்து கொள்ள நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதுவரையில் எழுதப்பட்டுள்ள புத்தகங்களில் பாரதியின் ஆன்மீகப் பார்வை  அதிகம் வெளிப்பட்டது இல்லை. கோதண்டராமன் அவர்களின் வேத முகம் இந்தக் குறையை போக்கியுள்ளது. பாரதியை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள இது ஒரு சிறந்த ஆவணம்.

     பாரதியார் ஒரு அத்வைத வேதாந்தி. அவருடைய பெரும்பாலான படைப்புகள் அத்வைத வேதாந்த கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்டவை, சிலவற்றில்  அத்வைத கருத்துக்கள் நேரடியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இவைகள் அத்வைதம் பற்றிய புரிதல் உள்ளவர்களுக்குத் தெரியும். பாரதியின் சிறப்பே பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் படைப்புகளை உருவாக்குவது, ஆனாலும் கூட அத்வைதம் புரிந்து கொண்டு பாரதியை படிப்பதற்கும் அத்வைதம் புரியாமல் பாரதியை படிப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கின்றது. 

    கடவுள் கோட்பாட்டை மாறுபட்ட கோணத்தில் விளக்குவதே அத்வைதம். இதற்கு  இரண்டற்ற ஒன்று என்பது பொருள். இங்கே இருப்பவைகள் எல்லாம் கடவுள் மட்டுமே. இருப்பதெல்லாம் இறைவனே. பிரபஞ்சத்திலுள்ள அனைத்திலும் கடவுளின் தன்மை வெளிப்பட்டு இருக்கிறது. கடவுள், உலகம், உயிர்கள்  இவைகள் வேறு வேறு என்பதை அத்வைதம் மறுக்கிறது. நாம் இதை கண்டு கொள்ளாமலும் இதைப் பற்றி சிந்தித்து பார்க்காமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உள்ளதை உள்ளபடி காணும் அறிவு வந்துவிட்டால் நமது அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும். இந்த அறிவை பல்வேறு நிலைகளிலிருந்து விளக்குவதே அத்வைதம்.

   வேதம் என்பது என்ன? உதாரணத்திற்கு ஒரு செல்போன் தாயாரிக்கும் நிறுவனம் சொல்போனை விற்பனை செய்கையில் அதன் விளக்க புத்தகத்தை வைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும். அதில் செல்போனை சிறந்த முறையில் பயன்படுத்திட விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதுபோல மனிதன் தன் வாழ்க்கையை துன்பங்கள் இன்றி வழ்ந்திட கொடுக்கப்பட்ட விளக்க புத்தகமே வேதம். இதில்

  1. மனிதன் என்பவன் யார்?
  2. எதற்காக மனித பிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது
  3. மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன?
  4. அந்த நோக்கத்தை அடைய வழிகள் என்ன?

 என்பவை பற்றிய விளக்கங்கள் உள்ளன.

   வேதத்தில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. முதல் பகுதி கர்ம காண்டம் இது பல்வேறு விதமான யக்ஞங்கள் செய்யும் விளக்கங்களை கூறுகிறது. இரண்டாம் பகுதி ஞான காண்டம் இதில் ஈச்வரன் (கடவுள்), ஜீவன் (மனிதன்), உலகம் பற்றியும் ஜீவ ஈச்வர ஐக்கியம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. வேதத்தின் இறுதி பகுதியில் ஞான காண்டம் இடம் பெற்றிருப்பதால் இவற்றை வேதத்தின் அந்தம் அதாவது வேதாந்தம் என்று அழைக்கின்றனர். இதற்கு மற்றொரு பெயர்  உபநிஷத். வேதாந்ததிற்கு அத்வைத விளக்கம் கொடுப்பது அத்வைத வேதாந்தம் எனப்படும். 

      மனிதனின் அறியாமை நீங்கி அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட ஞான காண்டத்தில் கூறப்பட்ட கருத்துக்களை குருவின் உதவிகொண்டு தெரிந்து, தெளிந்து அதன் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். ஞான காண்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள மனப்பக்குவம் தேவை. கர்ம காண்டத்தில் சொல்லப்பட்ட விசயங்களைச் செய்து பக்குவமடைந்து சித்த சுத்தி ஏற்பட்ட சாத்வீக குணம் நிறைந்தவர்கள் ஞான காண்டத்தை படிக்க தகுதியுடைய அதிகாரிகளாகிறார்கள்.  

  அத்வைத வேதாந்தத்தை சம்பிரதாய முறைப்படி விளக்கியவர்களில் ஆதிசங்கராச்சாரியார் மிகவும் முக்கியமானவர் அவர் ஏற்படுத்தி தந்த மரபுபடி பாரத தேசத்தில் அத்வைத வேதாந்தம் குரு பரம்பரையாக கற்பிக்கப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர், சுவாமி சின்மயானந்தா, சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் அத்வைதத்தை பாரம்பரிய மரபு மாறாமல் எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  பாரதியார் தன் வாழ்நாளில் ஏழு வருடங்கள் காசியில் தங்கியிருந்தார். அப்பொழுது முறையாக வேதம் பயின்றுள்ளார் குறிப்பாக ஆதிசங்கராச்சாரியாரின் வழி குருபரம்பரையாக வரும் அத்வைத வேதாந்தத்தை குருவின் மூலம் முழுமையாக பயின்று வாழ்க்கையிலும் அதன்படி நடந்தவர் என்பதை அவருடைய படைப்புளை படிக்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது.

 வேதத்தின் அறிவு நம்முள் நிலைப் பெற்றிட மூன்று விசயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    1) சிரவணம் 
    2) மனனம்
    3) நிதித்யாசனம்

    சிரவணம் என்பது குருவழியாக இந்த அறிவை முழுமையாக கற்றுக் கொள்வது. மனனம் என்பது பெற்ற அறிவை அலசி ஆராய்ந்து அதில் ஏற்படும் சந்தேகங்களை குருவிடம் கேட்டு ஐயங்களை நீக்கிக் கொள்வது. நிதித்யாசனம் என்பது பெற்ற அறிவில் சதாசர்வகாலமும் நிலைபெற்று இருப்பது. இதையே திருக்குறளில் 391 குறள் இவ்வாறு கூறுகிறது.

     கற்க கசடற கற்பவை கற்றபின்
     நிற்க அதற்குத் தக
 

     மனித மனதின் இயல்பு சதா சர்வகாலமும் எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டிருப்பது. எண்ணங்களை நெறிபடுத்தி இறை சிந்தனையில் மட்டும் நிலைத்திருக்க நிதித்யாசன தியானம் மிகவும் அவசியம். பெரும்பாலான பாரதியார் கவிதைகள் நிதித்யாசன தியானத்திற்கு பயன்படும்வகையில் படைக்கப்பட்டிருப்பது அத்வைதம் தெரிந்தவர்களுக்கு சுலபமாக புரிந்துவிடும்.

    பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் மற்றும் பகவத் கீதையை பிரஸ்தானத்திரயம் என்று அழைக்கின்றனர். அத்வைத கருத்துக்களை பாமரரும் புரிந்து கொள்ள பாரதியும் பிரஸ்தானத்திரிய நூல்களான பகவத் கீதை மற்றும் சில உபநிஷத்துக்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் அஷ்டாங்க யோகத்தை விளக்கும் பதஞ்சலி யோக சூத்திரத்தையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

   புதிய சொற்களையும், எளிய வார்த்தை அமைப்புகளையும் கொண்டு ஓசை நயமிக்க பல கவிதகளை படைத்துள்ள பாரதியை வெறும் கவிஞன், பத்திரிக்கையாளன், சுதந்திர போராட்ட வீரன், எழுத்தாளன், ஆசிரியன், தனி மனிதன் என்ற குறுகிய வட்டத்திற்குள் வைத்து பார்ப்பது நமது அறியாமையாலும் சில்லரைத் தனமான அரசியலாலும் ஏற்பட்டவை என்பதை இந்த புத்தகத்தை படித்தவுடன் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் பாரதி அதற்கும் அப்பாற்பட்டவன் என்பது தான் உண்மை.


அன்புடன்
தா.அருள்.

Tuesday, June 6, 2023

அறிவியல் படும்பாடு


இந்த பதிவு 2016-ல் எழுதியது. தமிழில் அறிவியல் கட்டுரையை படித்துவிட்டு மனதில் ஏற்பட்ட சலனத்துடன் இதை பதிவு செய்தேன்.


இந்த விசயத்தை நான் பேசக்கூடாது எனென்றால் நிறைய பேருக்கு கோபம் வரும். இருந்தாலும் மனது கேட்கவில்லை.

 

முன் எச்சரிக்கை: இப்பதிவில் இடம்பெறும் கருத்துக்கள் யாவும் தனிப்பட்ட யாரையும் நிந்தனை செய்வதற்காக எழுதப்படவில்லை என்ற பொருள் விளக்கத்தை முன்னதாகவே சொல்லிக்கொள்கிறேன்.

 

சென்றவாரம் கோயமுத்தூர் மாவட்ட மைய நூலகத்தில் படித்துக் கொண்டிருக்கையில் வேளாண்மை சம்பந்தமான மாத இதழ்களை படிக்க நேர்ந்தது. விவசாய கல்லுரியில இருக்கரோம் என்னதான் எழுதியிருக்காங்கன்னு புரட்டி பார்த்தேன். வேளாண் தகவல்கள் அதிகம் பரிமாரப்பட்டு இருந்தது உண்மையில் மகிழ்ச்சி. ஆனால் விசயம் அதுவல்ல. வேளாண் துறைசார்ந்த கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் முனைவர்களின் கட்டுரைகளும் கண்ணில் பட்டன. ஆசை ஆசையாக கட்டுரையை படித்தால் ஒன்றுமே புரியவில்லை. என்னடா இது தமிழ்லதான் எழுதி இருக்காங்க ஒருவேலை நாம முட்டாளா இருக்கறதனால புரியவில்லையா? என்று மனதிற்குள் ஒர் எண்ணம். இருந்தாலும் அந்த அளவிற்கு நாம அடிமுட்டாள் கிடையாதே ரொம்பவும் அறிவு இல்லைன்னாலும் சின்ன சின்ன அறிவியல் விசயங்களை புரிந்து கொள்ளக்கூடிய சிற்றறிவு நமக்கிருக்கிறதென்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு என் நண்பர்களிடம் விசாரித்தேன். ஒரே ஆச்சரியம்! ஒரு நண்பன் சொன்னான் டேய் அதப்போயி உன்ன எவன்டா படிக்க சொன்னான் அக்கட்டுரைகளலெல்லாம் அடுத்தவர்க்கள் படித்து விசயம் தெரிந்து கொள்வதற்கா எழுதப்படுகிறது அது எழுதப்படும் நோக்கமே வேறடா. தலைப்பிற்கு கீழ் பெயர் இருக்கிறதாவென்றுதான் அக்கட்டுரைகளில் நீ பார்க்க வேண்டும் என்று.  எனக்கு புரிந்து விட்டது இது கணக்கு காட்ட எழுதப்படும் கட்டுரைகளா.. சரி தான்.

 

ஒரு காலத்தில் நான் சொட்டுநீர் பாசன கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த போதும்,  இளநிலை ஆராய்ச்சியாளாராக வேலை பார்த்த பொழுதும், ஏன்.. தற்காலங்களிலும் விவசாயிகளையும், சிறு தொழில் முனைவோரையும் அதிகம் சந்தித்து வருகிறேன் என்னுடய சிறிய அனுபவத்தில் நான் உணர்ந்த விசயம் என்னவென்றால் நிறைய விவசாயிகள் நவீன தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர். விவசாய கண்காட்சிக்கு வரும் விவசாயிகள், தொழில் முனைவோர்கள் சந்தையில் கிடைக்கும் புதிய தொழில்நுட்பங்கள், புதிய விதை ரகங்கள், நோய்தடுப்புமுறைகளை தங்களுக்கு பயன்படுத்தி கொள்வதில் ஏதேனும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என்பதை தெரிந்து கொள்ள அதிக விருப்பமுடையவர்களாகவே இருக்கின்றனர். இப்படி இருக்கும் ஒரு சூழலில் கட்டுரைகள் எழுதுபவர்களுக்கு மிகப்பெரிய சமூதாய அக்கரை இருக்கவேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

 பெரும்பாலான விவசாயிகள் இன்னும் ஏழ்மை நிலையில் தான் இருந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் காசு கொடுத்து மாதாந்திரி புத்தகங்கள் வாங்கி படிப்பதே அபூர்வம் அப்படி இருக்கையில். காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் ஒன்றிரண்டு ஏழை வாசகர்களை மனதில் வைத்து கட்டுரைகளை நம்பகமான தகவல்களைக் கொண்டு செறிவோடு மெத்த படித்தவர்கள் என்று சமூதாயத்தால் மதிக்கப்படுவோர்கள் எழுத வேண்டும். அதுவே பொதுஜன கட்டுரைகளுக்கு அழகு. அதைவிட்டுவிட்டு பதவி உயர்வுக்காக கணக்கு காட்டவேண்டுமென்றும், இதனால் பணம் கிடைக்கும் என்ற நோக்கத்திலும் செயல்பட்டால் அது ஏழை விவசாயிகளையும், பணம் கொடுத்து வாங்கி படிப்பவர்களையும் ஏமாற்றும் செயல்களாகத்தான் கருதப்படுமே ஒழிய உண்மையான தகவல் பரிமாற்றமாக அது இருக்காது.