Friday, January 21, 2022

நிறைவான வாழ்வு என்பது என்ன?

 


சமீபத்தில எனக்குள் நடந்த விவாதம் நிறைவான வாழ்க்கை வாழ்வது என்றால் என்ன? அது எல்லோருக்கும் சாத்தியமானதா? என்று. இக்கேள்வி எனக்குள் வர காரணங்கள் இருக்கின்றன. அன்றாடம் நான் பார்க்கும், பழகும் மனிதரகளின் வாழ்க்கை முறைகளை கவனிக்கும் பொழுது ஒரு விசயம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது பெரும்பாலனவர்கள் மன நிம்மதியுடன் வாழவில்லை. பிரச்சினைகள் பலவிதங்களில் மனித மனத்தை நிம்மதி இழக்கச் செய்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றபடியால் இக்கேள்வி எனக்குள் எழ நியாயங்கள் இருப்பதாகவே தோன்றுகிறது, இதை இப்படி கூட சிந்திக்கலாம் நாம் எல்லோரும் ஒரு நாள் இறக்க போகிறோம் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் அது கண்டிப்பாக நடக்கத்தான் போகிறது என்கிறபட்சத்தில் நாம் இங்கு சம்பாதிக்க போராடும் பேர், புகழ், பணம் நிரந்தரமானது கிடையாது. இப்படி இருக்கையில் மனித வாழ்க்கை என்பது உண்மையில் என்ன? இவைகள் ஆரம்பத்தில் எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. இன்றைய மனநிலையில் நிறைவான வாழ்வை பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.

     

     மனித வாழ்க்கை என்பது சராசரியாக 80 வருடங்கள். பூமியின் ஆயுளை பொருத்த மட்டில் இது மிக மிக சொர்ப்பம். இங்கே நாம் ஏன் பிறந்தோம் என்ற கோள்விக்கு விடை கிடையாது. நமக்குள் ஏற்படும் எண்ணங்களுக்கும் நமது நடத்தைகளுக்கும் சூழ்நிலை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது, நம்மை சுற்றி நடப்பவைகள் நம்மை மனதளவில் பாதிக்கின்றன. சில பாதிப்புகள் நமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் சில பாதிப்புகள் துன்பம் அளிப்பதாகவும் இருக்கின்றன. நமது வாழ்க்கை இந்த இன்பதுன்பத்திற்குள் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. இப்படி இருக்கையில் இந்த வாழ்க்கையை நிறைவாக ஆக்கிக் கொள்ளவது பற்றி பொரும்பாலோனோர் சிந்திப்பதே இல்லை (இதில் நானும் அடங்குவேன்) என்னை பொருத்தவரை மனதிற்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய விசயங்கள் (உதாரணத்திற்கு நான் ஒரு ஆராய்ச்சியாளனாக வேண்டும் என்று மனதிற்குள் தோன்றுவது, நான் ஒரு சிறந்த விளையாட்டு வீரனாக ஆக வேண்டும் என்று என்னுவது போன்றவைகள்) எவை எவை என கண்டறிந்து அவைகளில் ஒன்றை மனதிற்குள் இலட்சியமாக வைத்து அவற்றிற்காக நமது நேரத்தையும் ஆற்றலையும் அதிகம் செலவு செய்ய வேண்டும் என்பது  முக்கியமாக படுகிறது. மற்றவர்களுக்காக சமூதாயம் என்ன நினைக்குமோ என்று என்னி நமக்கு விருப்பமில்லாதவைகளை செய்யும் பொழுதுதான் மனம் நிம்மதியை இழக்கிறது.

 

மனதிற்கு விருப்பமான விசயங்களை மட்டும் செய்து 80 வருடங்கள் வாழ்ந்து மறைந்தவர்களுடைய வாழ்க்கையை கூர்ந்து கவனிக்கையில் அவர்களுடைய வாழ்க்கை தன்னளவில் நிறைவை அளித்தது மட்டுமில்லாமல் அடுத்தவருக்கும் பயனுள்ள வகையில் அமைந்திருப்பதை உணர முடியும். இதற்கு உதாரணங்கள் நிறைய இருக்கின்றன.

 

ஆக நிறைவான வாழ்க்கை என்பது எல்லோருக்கும் சாத்தியமே இவ்வாழ்கை வாழ நமது சிந்தனையில் மாற்றம் வர வேண்டும். சில புரிதல்களை மாற்றிக்கொள்ள வேண்டும். நம்மை நாமே சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் அவ்வளவே. மானிடராய் பிறத்தல் என்பது அரிதான வாய்ப்பு அது நமக்கு கிடைத்திருக்கும் போது அதை நிறைவான முறையில் பயன்படுத்திக் கொள்ளவதே சரியான அனுகுமுறையாக இருக்க முடியும். நம்மிடம் இருக்கும் குறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், நல்ல விசயங்களுக்கு அதிக நேரத்தை செலவளித்து செயல் வடிவம் கொடுக்க முயற்சி செய்தால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக நல்ல விசயங்கள் (இதை நாம் நம்முடைய பலம் என்று கூட சொல்லலாம்) நம்முள் நுழைந்து நம்மை நிறைவான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்லும்.

 

இது என் கருத்து. இதைப் பற்றின உங்களுடைய நிலைப்பாடு என்ன? 

    

அன்புடன்

தா. அருள்

Thursday, January 28, 2021

மனித வாழ்க்கையைப் பற்றி….

       மனித வாழ்க்கையைப் பற்றி கொஞ்சம் சொல்ல தோன்றுகிறது. சமீப காலமாக நான் அதிகம் தேடித் தேடி படிக்கும் விசயமாக இது இருப்பதினாலும், இன்றைய காலகட்டத்தில் நான் சிந்திக்கும் விசயம் இதுவாக இருப்பதினாலும் நான் என்ன தெரிந்து கொண்டேன் என்ன நிலைப் பாட்டிற்கு வந்துள்ளேன் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.

     இந்த பூமியில் வாழும் உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும் தான் சிந்திக்கும் ஆற்றல் இருக்கின்றது. மனித இனம் இந்த பூமியில் தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகளாகின்றன என்று கூறுகின்றனர். சராசரியாக 75 ஆண்டுகள் வாழக்கூடிய மனிதர்கள் எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டுருக்கின்றனர். சமூதாய கூட்டமாக வாழும் மனிதர்களிடையே நிறைய ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. மனிதன் நிம்மதியாக வாழ உணவு, உடை மற்றும் உறைவிடம் அவசியமாக தேவைப்படுகின்றது. மனிதர்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் தடையாக இருக்கின்றது. இந்த ஏற்றத்தாழ்வுகள் பல வகைப்பட்டவையாக இருக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் ஜாதி, மதம், பணம் போன்றவைகள் இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக நான் கருதுகிறேன். ஆகவே இங்கு ஊழல், லஞ்சம் போன்றவைகளினால் மக்களின் உழைப்பு பெருமளவு சுரண்டப்படுகிறது. இதனால் ஏழைகள் மிகவும் ஏழைகளாகவும் பணக்கார்கள் மேலும் பணக்கார்ர்களாகவும் ஆகிக் கொண்டிருக்கின்றனர்.

Saturday, January 2, 2021

தொ.ப மறைந்துவிட்டார்

 


   தமிழகத்தில் கற்றறிந்தோரால் அன்போடு அழைக்கப்பட்ட தொ.பரமசிவன் என்கிற தொ.ப சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி கேட்டு என்னையறியாமல் அழுகை வந்தது. என்காலத்து அறிஞர்களில் நான் மிகவும் மதித்து வந்த ஆளுமை இவர். உண்மையில் இது தமிழர்களுக்கு பல வகைகளில் பேரிழப்புதான். என் போன்ற இளைய தலைமுறையினருக்கு பண்பாட்டை, கலாச்சாரத்தை இவர் சொல்லிச்சென்ற அளவுக்கு எளிமையாகவும் ஆழமாகவும் சொல்லித்தர நபர்கள் குறைவே. நான் அவருடைய புத்தகங்கள் சிலவற்றை படித்துள்ளேன். யூடியூபில் இவருடைய டாக்குமண்டரி வீடியோவை சில வருடங்களுக்கு முன்பு பார்த்திருக்கிறேன் அதில், தான் சென்று ஆராய்ச்சி செய்த இடங்களையும், சேகரித்துவைத்துள்ள தொல்பொருட்களையும் காண்பித்து அதற்கு விளக்கமும் கொடுத்திருப்பார். தமிழர் மரபுகளை நுணுக்கமாக புரிந்து கொள்ள இவர் எடுத்துள்ள முயற்சிகள் என்றும் போற்றுதலுக்குரியது.

 நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார் தமிழர்கள் அனைவரும் கட்டாயமாக படிக்கப்பட வேண்டிய புத்தகங்கள் அவை. தன்னுடைய அனுபவத்தையும் அறிவையும் சேர்த்து எழுதப்பட்ட அப்புத்தகங்கள் காலத்தால் சாகா வரம் பெற்று நிலைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. எனக்கு கு.ஞானசம்பந்தன் ஐயா மூலம் தான் தொ.ப அறிமுகம் ஆனார். ஞானசம்பந்தன் ஐயா எல்லா மேடைகளிலிலும் தொ.ப-வைப் பற்றி எதாவது ஒரு செய்தியை பகிர்ந்து கொண்டே இருப்பார் அப்படி ஒரு புத்தக கண்காட்சியில் சொற்பொழிவு நிகழ்த்தும் பொழுது அவர் படித்து அனுபவித்த புத்தகங்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தார் அந்த சொற்பொழிவில் தெ.பவைப் பற்றியும் அவர் எழுதிய புத்தகங்களைப் பற்றியும் சிலாகித்து பேசினார். நான் அதைக் கேட்டவுடன் தொ.பவை தேட தொடங்கினேன் இது நடந்து ஐந்து வருடங்களுக்கு மேல் இருக்கும்.

முதலில் அவரிடம் எனக்கு பிடித்த விசயம் அவருடைய எளிமை. எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு அவர் தரும் விரிவான ஆழமான விளக்கம் என்னை வசிகரித்து அவரை பின் தொடரவும், அவருடைய புத்தகங்களை வாங்கி படிக்கவும் வைத்தது. என்னை மேலும் ஆச்சரியப்படுத்திய விசயம் கோயில்களையும், தமிழர் மரபுகளையும் ஆர்வமுடன் ஆராய்ந்தாலும் பெரியாரின் மீதும் அவருடைய கருத்துக்கள் மீதும் ஈர்ப்புடையவராய் திகழ்ந்ததைச் சொல்வேன். 

தொ.ப-வை வெளியில் இருந்து ரசித்த ரசிகன் நான் என்றமுறையில் அவருடைய மறைவிற்கு இரங்கள் தெரிவித்து ஒட்டியிருந்த போஸ்டர்களில் அவருடைய சாதியை சொல்லி அந்த இணத்தவர்கள் தாங்கள் என்று பெயர் போட்டு இரங்களை தெரிவித்திருந்ததை பார்க்கையில் மிகவும் வருத்தமாக இருந்தது.

பண்பாட்டை, கலாச்சாரத்தை ஆராய்ந்து சொன்ன அறிஞரையும் பொதுமனிதனாக பார்க்கும் தன்மை அற்றவர்களாகத்தான் இந்த சமுதாய மக்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றனர். இது அறிவுசார்ந்த தளத்தில் இயங்க தொ.ப அவர்கள் நமக்கு அளித்துள்ள புத்தகங்களை படித்து, தெளிந்து அதை அனைவருக்கும் சென்று சேர்க்கும் செயலை நாம் தீவிரமாகச் செய்ய வேண்டும். அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நியாமான அஞ்சலியாக இருக்க முடியும். என்னை பொருத்தவரையில் தமிழர்கள், வாழும் காலத்தில் போற்ற மறந்த பல அறிஞர்களுள் தொ.ப-வையும் சேர்த்து விட்டார்களே என நினைக்கும் போதுதான் வருத்தமாக இருக்கிறது.    

Friday, January 1, 2021

Welcome 2021

 பொதுவா டிசம்பர் மாத இறுதியில் பெரும்பாலனவர்கள் நினைப்பது என்னவென்றால் அடடே அதுக்குள்ளயும் இந்த வருடம் முடிஞ்சிடிச்சா எனவாகத்தான் வழக்கமாக இருக்கும். ஆனால் 2020-ம் வருடம் அப்படியில்லை என்பது எல்லொருக்கும் தெரியும். எப்படா இந்த வருசம் முடியும் என நாட்களை எண்ணிக்கொண்டு தள்ளவேண்டிய நிலைக்கு தல்லப்பட்டுவிட்டோம். பொருளாதர இழப்பு, வேலைவாய்ப்பு இழப்பு, மனஉலச்சல் என பல இன்னல்களை போன வருடம் நமக்கு கொடுத்துவிட்டது. பல பேர் மரணமடைந்தனர். நிறைய கெட்ட செய்திகளை கேட்க நேர்ந்தது. இப்படியாக கறுப்பு ஆண்டாக வரலாற்றில் பதியும் வகையில் கொரனா மாற்றிவிட்டதை நினைக்கையில் வருத்தமாகத்தான் உள்ளது. இருந்தாலும் அனைத்து இடர்பாடுகளையும் தாண்டி இன்று 2021-ல் அடியெடுத்து வைக்கிறோம். சென்ற மகிழ்ச்சி திரும்பிட, ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்திட இந்த வருடம் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த வருடத்தை வரவேற்போம்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



அன்புடன்

தா.அருள்