Monday, June 29, 2015

தொழி நீக்கப்பட்ட எள்பிண்ணாக்கு ஒரு புரதச்சத்துமிகுந்த உணவு



            இந்தியாவில் பயிரிடப்படும் தொன்மையான எண்ணெய்வித்து பயிர்களின் வரிசையில் எள் பயிர் முதலிடம் வகிக்கிறது. மற்ற எண்ணெய் வித்துபயிர்களைக்காட்டிலும் எள்ளில் அதிக எண்ணெய் வளமும் (46-64%), புரதச்சத்தும் (25%) நிறைந்து காணப்படுவதால் எள் பயிரை எண்ணெய்வித்துக்களின் அரசி என்று அழைக்கின்றனர். 2011-12 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 18.34 இலட்சம் எக்டர் பரப்பளவில்  எள் பயிர் பயிடப்பட்டு 8.10 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் 0.80 இலட்சம் எக்டர் பரப்பளவில்  0.26 இலட்சம் டன்களாகும். எள் பயிர் முக்கியமாக அதன் எண்ணெய் வளத்திற்காக  பயிரிடப்படுகிறது இருப்பினும் எண்ணெய் எடுக்கப்பட்ட எள்ளின் கழிவில் (பிண்ணாக்கு) உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆனால் தொழிற்சாலைகளில் சுகாதாரமற்ற முறையில் பிண்ணாக்கை கையாள்வதாலும் எள்ளின் மேல் தொழியில் காணப்படும் சில எதிர் ஊட்டச்சத்து காரணிகளாலும் இப்பிண்ணாக்கை மனித உணவிற்கு பயன்படுத்தமுடிவதில்லை.  

        பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலுள்ள மத்திய அறுவடைபின்சார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் எண்ணெய்வித்துகளின் பிண்ணாக்குகளிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட உணவு தயாரிக்கும் ஆராய்ச்சியில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றது. சமீபகால ஆராய்ச்சியில் எண்ணெய் நீக்கப்பட்ட எள்ளை கோதுமை மாவுடன் கலந்து செய்யப்பட்ட பிஸ்கோத்துகள் உடலுக்கு ஏற்றது என கண்டறியப்பட்டுள்ளது. இக்கட்டுரையின் மூலம் எள்பிண்ணாக்கு பற்றிய ஆராய்ச்சியினை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
செயல்முறை விளக்கம்
  சந்தையிலிருந்து இவ்வாராய்ச்சிக்காக வாங்கப்பட்ட எள்ளை கல், தூசு மற்றும் சிறு துரும்புகளை சல்லடை சலிப்பான் கொண்டு சலிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. எள்ளில் காணப்படும் முக்கிய எதிர் ஊட்டக்காரணிகளான ஆக்சலேட் மற்றும் பைட்டிக் அமிலங்களை களையும் வகையில் எள்ளிலிருந்து எண்ணைய் எடுக்கும்முன்பு மேல் தொழி நீக்கப்பட்டு திருகு அழுத்தி இயந்திரத்தின் மூலம் எண்ணைய் பிழிந்தெடுக்கப்பட்டது. பின் எள்பிண்ணாக்கை தகுந்த உலர்த்தி மூலம் காயவைத்து, பொடிசெய்து கோதுமை மாவுடன் 10:90, 20:80, 30:70, 40:60 மற்றும் 50:50 என்ற விகிதாசாரத்தில் கலந்து பிஸ்கோத்துகள் தயார் செய்யப்பட்டன.  

      முந்தைய ஆராய்ச்சியாளர்கள் முலம் பரிந்துரைசெய்யப்பட்ட நிலையான வழிமுறைகளை பின்பற்றி ஊட்டச்சத்துகள் குறிப்பாக புரதம், கொழுப்பு, தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் முதலியன கண்டறியப்பட்டன. ஹண்டர் கலர் மானியின் உதவிகொண்டு பிஸ்கோத்தின் நிற மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டது. இறுதியாக சுவைப்பற்றின மதிப்பீடுகள் சோதனை செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டது. எள் பிஸ்கோத்துகள் செய்யும் வழிமுறை விளக்கம் படம் 1-ல் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.



படம் 1. எண்ணெய் நீக்கப்பட்ட எள் பிஸ்கோத்துகள் செய்யும் வழிமுறை விளக்கம்


ஆராய்ச்சி முடிவுகள்
தொழிநீக்கப்பட்ட எள்
      எள்ளில் உள்ள இராசயன கலவைகளின் மாற்றம் தொழிநீக்கம் செய்யும் முன்பும், பின்பும்  எவ்வாறு பெற்றுள்ளன என்பது அட்டவணை 1-ல் விளக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தொழிநீக்கம் செய்வதானால் எள்ளில் நார்ச்சத்து குறைந்து அதே சமயத்தில் எண்ணைவளமும்புரதச்சத்தும் சற்றே அதிகரித்துள்ளது தெரியவருகிறது ஆகையால் எண்ணை எடுப்பதற்க்கு முன் தொழிநீக்கம் செய்வது குறிப்பிடத்தகுந்த விளைவை எண்ணய் மற்றும் பிண்ணாக்கில் ஏற்படுத்தும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது

அட்டவனை 1. எள்ளில் காணப்படும் இரசாயனக் கலவைகள்
அளவுருக்கள்
முழு எள் விதை
தொழிநீக்கப்பட்ட எள் விதை
புரதம், (%)
18.6
21.2
கொழுப்பு, (%)
49.3
53.4
நார்ச்சத்து, (%)
6.3
2.3
கார்போஹைட்ரேட், (%)
20.6
17.6
தாதுக்கள், (%)
5.2
5.3
ஆற்றல், கலோரி/கி
563
582











எள் பிஸ்கோத்துகள்
      கோதுமைமாவுடன் கலந்து செய்யப்பட்ட எள் பிஸ்கோத்துகளின் ஊட்டச்சத்து பரிசோதனை பற்றிய விளக்கங்கள் அட்டவணை 2-ல் காண்பிக்கப்பட்டுள்ளனகோதுமை மாவுடன் பல்வேறுவிகித்தில் கலக்கப்பட்ட எள் பிஸ்கோத்துகளில் புரதம், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்தில் கணிசமான மேம்பாடு காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் 50 சதவீதம் கோதுமை மாவுடன் எள் பிண்ணாக்கு மாவு கலந்து செய்யப்பட்ட பிஸ்கோத்துகள் கோதுமைமாவுடன் கலக்கப்படாத எள் பிஸ்கோத்துகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டு மடங்கு புரதம் அதிகமாக இருப்பது சோதனைகள் மூலம் தெரியவந்தது.

அட்டவணை 2. எள் பிஸ்கோத்தின் ஊட்டச்சத்துகள்
அளவுருக்கள்
(%)
எள்பிண்ணாக்கு மற்றும் கோதுமை மாவு விகிதம்
0:100
10:90
20:80
30:70
40:60
50:50
ஈரப்பதம்
3.61
3.13
3.17
3.46
3.34
3.54
புரதம்
8.19
9.33
10.88
13.12
14.58
16.31
கொழுப்பு
21.09
21.79
24.04
24.80
28.98
29.50
தாதுக்கள்
2.57
2.72
3.04
3.63
3.83
4.37
நார்ச்சத்து
0.42
0.71
0.76
0.79
0.85
0.92
கார்போஹைட்ரேட்
64.54
63.03
58.87
54.99
49.27
46.28


              எள் பிஸ்கோத்துகளின் சுவை பற்றிய சோதனை முடிவுகள் அட்டவனை 3-ல் கொடுக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 20 சதம் எள் பிண்ணாக்கு மாவு கலந்த பிஸ்கோத்துகள் அதிக ஒட்டுமொத்த ஏற்பை வழக்கமாக கோதுமைமாவில் தயாரிக்கப்படும் பிஸ்கோத்துகளை காட்டிலும் பெற்றுள்ளது. 30 மற்றும் 40 சதம் எள் பிண்ணாக்கு மாவு கலந்த பிஸ்கோத்துகள் வழக்கமான கோதுமை பிஸ்கோத்துகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் இல்லை என்பது தெரிகிறது. மேற்கண்ட சோதனைகளிலிருந்து 20 சதம் எண்ணைய் நீக்கப்பட்ட எள் பிண்ணாக்கு மாவு மெச்சத்தகுந்த விளைவுகளை பெற்றுள்ளதால் இவ்வாறாக பிண்ணாக்கு மாவு கலந்து செய்யப்படும் உணவுகள் ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் என்பது இச்சோதனைகளிலிருந்து தெளிவாகிறது.


அட்டவணை 3. எள் பிஸ்கோத்துகளின் சுவை பரிசோதனை
எள்பிண்ணாக்கு மற்றும் கோதுமை மாவு விகிதம்
சுவை பற்றிய பரிசோதனை
நிறம்
மணம்
தோற்றம்
சுவை
ஒட்டுமொத்த ஏற்பு
0:100
7.55
6.50
7.18
6.47
7.03
10:90
7.70
6.90
7.25
6.32
7.27
20:80
7.80
6.90
7.33
7.11
7.47
30:70
6.92
6.30
7.16
6.25
6.55
40:60
6.55
6.00
6.38
5.87
6.08
50:50
4.30
5.40
6.02
5.00
4.95


                 மக்கள் தொகை அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் ஊட்டச்சத்து மிகுந்த உணவை மக்களுக்கு வழங்குவது அரசாங்கங்களுக்கு ஒரு பொரும் சவாலக இருந்து வருகின்றது. எண்ணெய் தொழிற்ச்சாலைகளில் கழிவாக கிடைக்கும் பிண்ணாக்குகளை மதிப்புகூட்டப்பட்ட உணவாக மாற்றுவதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யமுடியும் அதே வேளையில்  பிண்ணாக்குகளை உணவாக தயாரிக்க ஆகும் செலவும் மிகக்குறைவு என்பதால் இத்தொழிலில் வளர்ந்து வரும் தொழில்முனைவோரும் ஈடுபட முடியும். மேலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இது போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட உணவுகள் அதிகம் தேவை என்பதால் எண்ணெய் பிழிந்தெடுக்கும் தொழிலில் ஈடுபடுவோரும், அரசாங்கமும் இது பற்றி துணிந்து சிந்திக்க வேண்டியது அவசியமாகும். 

Sunday, May 31, 2015

பிரச்சினை யாரிடத்தில்



கடந்த மே மாதம் 8-ம் தேதி (8.5.2015) தமிழ் இந்து நாளிதழில் ”காந்தியை ஏமாற்றிவரும் இந்தியா” என்றொரு கட்டுரை வெளியாகியிருந்தது இதை எழுதியவர் ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர் மு.இராமனாதன். கட்டுரையின் சாராம்சம் இதுதான்

“ஹாங்காங்கில் சட்டவிதிமுறைகளை பினபற்றுவது பற்றி பள்ளிகளிலேயே போதிக்கின்றனர் அதனால் அங்கு மக்கள் பண்போடு நடந்துகொள்கின்றனர். புறத்தில் தூய்மையும் அகத்தில் நேர்மையாகவும் இருக்கவேண்டுமென்று போதித்த காந்திய தேசத்தில் சட்டவிதிமுறை மீறல்கள் சாதரணமாக நடக்கின்றன இதற்கு கல்வி வணிகமையமாகிவிட்டதுதான் காரணம்” என்பது.

அண்மையில் எனது அம்மாவிடம் பேசும் போது இதைச் சொன்னேன் தனியார் பள்ளிக்கூடங்களை தேடித் தேடி சேர்க்கத் துடிக்கும் நம்மவர்களுக்கு உண்மையில் மாணவனின் அறிவு வளர்ந்திருக்கா இல்லையா என என்னைக்காவது கவலைப்பட்டதுண்டா? நம்முடைய எண்ணமெல்லாம் மார்க் அதிகம் வாங்கிவிட்டானா இல்லையா என்பதில் தான் இருக்கிறதென்று என்று கேட்டேன். அதற்கு அம்மா கவர்மெண்டுல அதிக மார்க்கதான கேக்குறான் என்று சொன்னார். அம்மா படிப்பறிவில்லாதவர் இருந்தாலும் படிக்க வைத்தால் தான் பிள்ளைகளின் எதிகாலம் நன்கு அமையும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் இவ்வாறு சொல்வதின் நிதர்சணம் எனக்கு புரிகிறது ஆனால் என்வாதம் இதுவல்ல.

படிப்பு என்பது என்ன?

பெரும்பாலானோர் கருதுவது என்னவென்றால் பாடபுத்தகத்தில் இருப்பதை படித்து, பரிட்சை எழுதி, மார்க் அதிகம் வாங்கினால் போதும் அதைத் தவிர, அதற்கு மேலே படிப்பு என்பது ஒன்றுமில்லை என்று வரையறுத்திருக்கிறார்கள். நன்கு படித்தவர்கள் எத்தனை பேர் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், எத்தனை பேர் வாழ்க்கையில் பெரிய அளவில் சாதித்திருக்கிறார்கள் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை படிப்பிலோ, கல்வி முறையிலோ அல்லது பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ ஆசிரியரிடமோ தேடக்கூடாதென்றும் மறைமுகமாக இவர்கள் கூறுவது எனக்கு புரிகிறது. இன்னும் சொல்லப்போனால் பல பெற்றோருக்கே இன்னும் சரியாக இது விளங்கவில்லை என்றுதான் சொல்வேன். பணம் சம்பாதிக்க படிப்பு அவசியம் அதற்கு என்ன வழி அவ்வளவு தான் அவர்கள் பார்வை நான் மெத்த படித்த பெற்றோர்களை மனத்தில் கொண்டு சொல்லவில்லை என்னுடைய அம்மா போன்ற பெற்றோர்களை மனத்தில் கொண்டுதான் இதைச் சொல்கிறேன்.

இதனால் அறிவியியல் என்ன சொல்கிறது, வரலாறு என்ன சொல்கிறது, இலக்கியங்கள் என்ன சொல்கின்றன இதல்லாம் யாருக்கு வேணும். முழுவதுமாக உணர்ந்து படித்தல் வேண்டும் எனும் கோட்பாடே இன்று வழக்கொலிந்து வரும் காலகட்டத்தில், மேற்கண்ட கட்டுரையில் பண்பை பற்றி பேசுகிறார் கட்டுரையாளர் அவர் தமிழகத்தில் இருப்பவராக எனக்கு தெரியவில்லை ஏனெனில் தமிழர்களுக்கு சினிமாவும், கிரிகெட்டும் மற்ற கேலிக்கைவிசயங்களும் போதிக்க செலவலிக்கும் பணமும், பாடும் உண்மையில் தொலைக்காட்சி, எஃப் எம் ரேடியோ, பத்திரிக்கை மற்றும் வார மாத இதழ்கள் நடத்துபவர்களுக்குத்தான் தெரியும். எவ்வளவு முதலீடு செய்து எத்தனை ஆண்டுகள் முயற்சியின் பயனால் இவ்விசயம் நமது மூலையில் பதியப்பட்டுள்ளது இதையெல்லாம் தாண்டி பண்பு நலன்களை இளையதலையினருக்கு வளர்த்துவிடுவார்களா நமது ஆட்சியாளர்களும் கல்வியாளார்களும். தமிழ்நாட்டில் பெறக்க போகும் குழந்தை முதற்கொண்டு இப்பண்புகள் மூலைச் சலவை செய்து பிறந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை அவருக்கு. அடுத்தவன் வாழ்ந்தா என்ன? செத்தால் நமக்கென்ன? எனக்கு என் வேலை நடந்தால் போதும் என்ற மனப்பாங்கே வளர்க்கப்பட்டுள்ளது இங்கு என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். ஒழுக்கமாக வாழ்ந்தால் காசு கிடைக்குமா? கோடி கோடியாக காசு கிடைக்குமென்றால் ஒருவேலை சமூதாயத்தில் பாதிபேர் இந்த ஒழுக்கம் என்ற சொல்லையாவது உச்சரித்துக் கொண்டிருப்பார்கள் வாழ்வது என்பது பற்றி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் காசு கிடைக்குதுல்ல.

நல்லவிசயத்திற்கு ஒரு விதிமுறை ஏதாவது கொண்டுவந்தால் கூட அதில் ஓட்டைகளை கண்டுபிடித்து எப்படி ஏமாற்றலாம் என்றுதான் என்னிக் கொண்டிருக்கிறார்கள், லஞ்சம் கொடுத்து எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ளமுடியும் என்பதுதான் அனைவரின் நோக்கமும் செயல்பாடும் கேட்டால் சர்வைவல் ஆப் த ஃபிட்டஸ்ட் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லாதார் என்று திருவள்ளுவரே சொல்கிறார் விதி முறையாவது ஒழுக்கமாவது எல்லாம் மண்ணாங்கட்டி. அடுத்தவனை ஏமாற்றி வாழக்கற்றுக் கொடுக்கவேண்டும் நம் கல்விமுறை என்னைப் பொறுத்தவரையில் இப்பண்புதான் இன்றைய காலகட்டத்தில் நமக்குத் தேவை.
  
அக்கட்டுரையில் ஒரே ஒரு உதாரணத்தை சுட்டிகாட்டியிருந்தார். அதிகாலையில் ஒரு குடுப்பத்தினர் சென்னை இரயில் நிலையத்திற்கருகில் ரோட்டை கடக்க மூட்டை முடிச்சுகளோடு டிவைடரை எகிறி குதித்து கடந்து வந்தார்கள், இதனால் ஏற்படும் விபரீதத்தை உணர்ந்தவர்க்ளாக தெரியவில்லை. சாலைவிதிகளை சர்வசாதரணமாக மீறுகிறார்கள், காந்தி பொறந்த நாட்டில் இப்படி எல்லாம் செய்கிறார்களே இது காந்தியை ஏமாற்றும் வேலையல்லவா? நேர்மையும் நீதியும் போதித்த காந்தியை ஏமாற்றுகிறார்கள் என்று எழுதியிருந்தார். எனக்கு இதைப்படித்தவுடன் சிரிப்புத்தான் வந்தது தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் என்னமோ எல்லா விசயங்களும் சட்டப்படி, விதிமுறைகள் படி அச்சு அசலாக பிசிறு தட்டாமல் மதித்து வாழ்ந்து வரும் மக்கள் இப்படி செய்கிறார்களே என்று ஆதங்கப்பட்டு கொள்ள. காந்தி வாழ்ந்த காலத்தலேயே நம்மாளுங்க இப்படிதான் இருந்தார்கள் இதற்கு சரித்திர சான்றுகள் ஏராலம் இருக்கின்றன சுதந்திரம் கிடைச்சு இவ்வளவு நாளயிடுச்சே என்னத்த செஞ்சுட்டோம் என்று ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொண்டு அப்படியே தான் வாழ்ந்துகொண்டு வருகிறோம். என்னத்த பெரிய மாற்றத்த எதிர்பார்க்க முடியும்.

தனிமனித ஒழுக்கம் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும், உணர்வுப்பூர்வமாக, ஆழ்மனதில் பதியும்படி முதலில் போதிக்க வேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலை பெற்றோர்களிடமிருந்து அகலவேண்டும். இப்படி அடிப்படையிலேயே ஆயிரம் குளருபடிகள் உள்ள நம் கல்விமுறையை வைத்துக் கொண்டு, சமூதாயத்தில் நடக்கும் விசயங்களைக் கண்டு வேதனைப்படுவதும் பிரச்சினை யாரிடத்தில் இருக்கிறதென்று அலசி ஆராய முற்படுவதுவும் என்னைப் பொறுத்தவரையில் முட்டாள்தனமான செய்ல்களே. மாற்றத்தை உண்மையில் எதிர்பார்க்கும் எவரும் கல்விமுறைகளை திருத்தியமைத்து செயல்முறைப்படுத்திட என்ன வழி என்பதை சிந்திப்பதே சாலச்சிறந்தது அதைவிட்டுவிட்டு இம்மாதிரியான் கட்டுரைகள் ஆயிரம் வெளியானாலும் அதனால் சமூதாய தாக்கம் ஒன்றும் இருக்காது.

Sunday, May 10, 2015

ஆற்றல் (Energy)



அறிமுகம்:
ஆற்றல் பலவகைப்படும் அவை வெப்ப ஆற்றல், மின் ஆற்றல், வேதி ஆற்றல், நிலையாற்றல் மற்றும் இயக்க ஆற்றல் என பிரிக்கப்பட்டுள்ளன என்று பள்ளி பாடங்களில் நாம் படித்ததுண்டு. ஆனால் நான் இங்கு ஆற்றல் என பொதுவாக குறிப்பிடுவது பொட்ரோல், டீசல், நிலக்கரி, சூரியன் மற்றும் காற்றிலிருந்து பெறப்படும் ஆற்றல்களாகும் இவையும் மேற்குறிப்பிட்ட வகைகளுக்குள் எதோ ஒருவகையில் சம்பந்தம் உடையது என்பது கூர்ந்து கவனித்தால் புரியும்.

பெருகி வரும் மக்கள்தொகையினால் பூமியிலுள்ள ஆற்றல் வளங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன குறிப்பாக நிலத்திற்கடியில் கிடைக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி போன்றவைகளை சொல்லலாம்.  மேலும் இவைகளை எரிப்பதினால் சுற்றுசூழல் மாசடைகிறது. அதுமட்டுமில்லாமல் உலக வெப்பமயமாதல் பிரச்சினை இன்று மனிதகுளத்திற்கு பெரிதும் சவாலாக அமைந்துள்ள ஒரு பிரச்சினை. இவைகள் எப்படி உருவானது?, கட்டுபடுத்தும் காரணிகள் என்னென்ன? அழிந்து வரும் ஆற்றல் வளங்களுக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கக்கூடிட வளங்களை நமது தேவைகளை பூர்த்தி செய்ய எப்படி பயன்படுத்துவது?  என்னென்ன தொழில் நுட்பங்கள் உள்ளன என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வது அவசியம். அதற்கு முதலில் ஆற்றல் என்றால் என்ன என்பதிலிருந்து தொடங்குவோம்.

ஆற்றல்:

     வேலை செய்யும் திறனே ஆற்றல் எனப்படும். ஆற்றலை கண்ணால் பார்க்க முடியாது ஆனால் உணர முடியும்; காற்றைப் போல. ஆற்றலை அளப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆற்றல் பற்றின வரையறையை கொஞ்சம் புரியும் படி விளங்கிட கீழ்கண்ட உதாரணம் நமக்கு உதவும். ஒருவர் உருவத்தில் மெலிந்தவராக காணப்படுவார் ஆனால் உடலை வருத்தி அதிக வேலை செய்யும் திறன் உள்ளவராக இருப்பார். அதேசமயம் உடல் பருமன் உள்ளவர்கள் உடலை வருத்தி வேலை செய்ய மிகவும் சிரமப்படுவார்கள். ஒருவர் எவ்வளவு வேலை செய்திருக்கிறார் என்பதை பொருத்து அவரிடம் உள்ள ஆற்றலை கணக்கிட முடியும். இதன் மூலம் அதிக வேலை செய்பவர்களிடம் ஆற்றல் அதிகம் உள்ளதென்றும் குறைவான வேலை செய்பவர்களிடம் ஆற்றல் குறைவு என்பதையும் புரிந்துகொள்ள முடியும். மேற்கண்ட வறையரை இயந்திரங்களுக்கும் பொருந்தும்.   

ஆற்றலின் அலகு ஜீல் ஆகும்

ஆற்றலின் வகைகள்:
இரண்டு வகையான ஆற்றல்கள் உள்ளன அவையாவன 

1.  புதுபிக்கக்கூடிய ஆற்றல்

ஒருமுறை பயன்படுத்திவிட்டு மீண்டும் மீண்டும் நம்மால் உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றல்களுக்கு புதுபிக்கக்கூடிய ஆற்றல் எனப்படும்.

உதாரணம்: சூரிய ஆற்றல், காற்றின் மூலம் பெறக்கூடிய ஆற்றல்

2. புதுபிக்க முடியாத ஆற்றல்

ஒருமுறை பயன்ப்டுத்திவிட்டால் மீண்டும் அவைகளிடமிருந்து ஆற்றலை உற்பத்தி செய்ய இயலாது இவ்வகை ஆற்றல்களுக்கு புதுபிக்க முடியாத ஆற்றல் என்று பெயர்.

உதாரணம்: பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரியிலிருந்து பெறப்படும் ஆற்ற்ல்கள்

  மேற்கண்ட ஆற்றல்கள் நிலத்திற்கடியிலிருந்து பெறப்படுவதால் இவைகளின் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள்களுக்கு மாற்று தீர்வாக சூரிய மற்றும் காற்று ஆற்றல்களை பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகளும் அரசாங்கங்களும் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.